கொழும்பு: இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் இன்று நடக்கிறது. கொரோனா கட்டுப்பாடுகளுடன் காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. இலங்கையில் கடந்த மார்ச் 2ம் தேதி அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து ஏப்ரல் 25ம் தேதி தேர்தல் நடக்க இருந்தது. ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேர்தல் ஜூன் 20ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. எனினும், கொரோனா பரவுதல் குறையாத நிலையில் தேர்தல் ஆகஸ்ட் 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இலங்கையில் மொத்தமுள்ள 225 இடங்களுக்கான நாடாளுமன்ற தேர்தல் இன்று நடக்க உள்ளது.
கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்தாலும் சமூக இடைவெளி கடைபிடித்தல், மாஸ்க் அணிதல் என பல்வேறு கெடுபிடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் நடக்கும் 16வது நாடாளுமன்ற தேர்தல் இது. இதில் அடுத்த 5 ஆண்டுகளுக்கான 225 எம்பிக்களில் 196 பேரை மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்க உள்ளனர். மொத்தம் 1.6 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இம்முறை முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சே தலைமையிலான இலங்கை பொதுஜன பெரமுனா, ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து வெளியேறிய சஜித் பிரேமதசாவின் ஐக்கிய மக்கள் சக்தி என மும்முனை போட்டி உள்ளது. இதில் ராஜபக்சே கட்சிக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.