×

புனித தோமையார் மலை ஒன்றியத்தில் லஞ்ச புகாரில் சிக்கிய ஊராட்சி செயலர்கள் பணியிட மாற்றம்: அதிகாரிகள் நடவடிக்கை

தாம்பரம்: புனித தோமையார் மலை ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில் சிக்கிய 5 ஊராட்சி செயலர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் முதல் பிரதான சாலையில் புனித தோமையார் மலை ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளது. இதன் கட்டுப்பாட்டில் கவுல்பஜார், திரிசூலம், திருவாஞ்சேரி, ஒட்டியம்பாக்கம், கோவிலம்பாக்கம், பெரும்பாக்கம், மேடவாக்கம், முடிச்சூர், வேங்கைவாசல், மதுரபாக்கம், மூவரசம்பட்டு, அகரம்தென், சித்தாலப்பாக்கம், நன்மங்கலம், பொழிச்சலூர் என 15 ஊராட்சிகள் உள்ளன. மேற்கண்ட பகுதிகளில் கட்டிட அனுமதி, சாலை பணிகள், ஊரக வளர்ச்சித் துறை தொடர்பான பணிகள், அங்கன்வாடி மையங்கள், சமூக நலத்துறையின் நல உதவிகள், திருமண உதவித்தொகை திட்டம், இரண்டு பெண் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு நிதி உதவி திட்டம் உள்ளிட்ட பணிகள் இந்த அலுவலகம் மூலம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கடந்த தீபாவளி பண்டிகையின்போது ஒப்பந்ததாரர்கள், கட்டுமான நிறுவனங்களிடம் இருந்து வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் லட்சக்கணக்கில் பணம் பெற்றதாக வந்த ரகசிய தகவலின்பேரில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் தேதி சென்னை லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி குமரகுருபரன் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் திடீரென இங்கு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கணக்கில் வராத ரூ.22.55 லட்சம் மற்றும் 12 சவரன் நகைகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்கள் உட்பட 11 பேரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

அதில் ரூ.10.66 லட்சம் கைப்பற்றப்பட்டது. இந்த சோதனையை தொடர்ந்து, வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கர் கடலூர் மாவட்டத்திற்கும், ஊராட்சிகளின் வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கர் திருவள்ளூர் மாவட்டத்திற்கும், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் வேலூர் மாவட்டத்திற்கும், பெரும்பாக்கம் ஊராட்சி செயலர் ஜெயராமன் ராணிப்பேட்டைக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். கடந்த ஏப்ரல் 30ம் தேதி ஓய்வு பெறுவதாக இருந்த ஊராட்சி செயலர் ஜெயராமன் அதற்கு முன்னதாகவே திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இவரிடம் இருந்து 12 சவரன் நகை மற்றும் ரூ.5 லட்சம் ஆகியவை லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், லஞ்ச புகாரில் தொடர்புடைய மேடவாக்கம் ஊராட்சி செயலர் பாபு, ஒட்டியம்பாக்கம் ஊராட்சி செயலர் ஜான்சன், பெரும்பாக்கம் ஊராட்சி செயலர் சேதுபதி, நன்மங்கலம் ஊராட்சி செயலர் வேலுசாமி ஆகியோர் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.22.55 லட்சம் மற்றும் 12 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.


Tags : bribery scandal ,Panchayat secretaries ,St. Thomaiyar Hill Union , St. Thomas, Mountain Union, on bribery complaint, panchayat secretaries, change of workplace, officers
× RELATED தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம்...