×

நாளை வரலாற்றின் சிறப்புமிக்க தினம்.. பல ஆண்டு கால கனவான அயோத்தியில் ராமர் கோயில்: 40 கிலோ வெள்ளி செங்கலை எடுத்து வைத்து பிரதமர் மோடி அடிக்கல்!!

அயோத்தி: உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 161 அடி உயரத்தில் பிரமாண்டமான ராமர் கோயில் கட்டப்பட உள்ளது. இந்த கோயிலுக்கான பூமி பூஜை வைபவத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். ராமர் பிறந்த இடம் என்று நம்பப்படும் ராம ஜென்ம பூமியில் அனைத்து கடவுளர்கள்  மற்றும் பெண் கடவுளர்களை வரவேற்கும் ராமார்ச்சன் பூஜை இன்று நடைபெற்றது. பூமி பூஜை விழாவிற்கான கவுரி விநாயகர் பூஜை நேற்று முன்தினம் தொடங்கியது.

ராமர் கோயில் வடிவமைப்பு

*வடமாநில கோயில் கட்டுமானக் கலையில் ராமர் கோயில் கட்டப்பட உள்ளது. மூன்று மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம், 360 தூண்கள், 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக ராமர் கோயில் கட்டப்படும்.

*முதல் மாடியில் 160 தூண்கள், 2-வது மாடியில் 132 தூண்கள், 3-வது மாடியில் 72 தூண்கள் அமைக்கப்படும். கருவறை, எண் கோண வடிவில் இருக்கும்.பிரம்மாண்ட ராமர் கோயிலை சுற்றி 4 சிறிய கோயில்களும் கட்டப்பட உள்ளன.

*மேலும் கோவிலின் கட்டுமானத்திற்கு தேவையான கற்கள் அனைத்தும் ராஜதானின் பன்சி மலையிலிருந்து வெட்டியெடுக்கப்பட்டு பயன்படுத்தப்படும். கோவில் தரை தளத்திற்கு மட்டும் “ஸ்ரீ ராம்” பதித்த இரண்டு லட்சம் செங்கற்கள் பாதிக்கப்பட உள்ளது.

*கோவிலைக் கட்டி முடிக்க மூன்றரை வருட காலம் ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கோவிலுக்கான ஒட்டுமொத்த செலவு 300 கோடியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.பூமி பூஜை

பூமி பூஜை


*நாடு முழுவதிலும் இருந்து சுமார் 2 ஆயிரம் கோயில்களின் புனித மண் மற்றும் 100 நதிகளின் புனித நீரும் பூமி பூஜைக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

*நாளை காலை 8 மணி முதல் 12 மணி வரை பூமி பூஜையை நடத்துவதற்கு நேரம் குறிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து காலை முதலே வேத முழக்கங்களுடன் பூமி பூஜைக்கான பணிகள் தொடங்கிவிடும். பிரதமர் மோடி முதலில் ஹனுமன்கரி கோயிலில் தரிசனம்  செய்கிறார்.

*அதன்பிறகு ராம ஜன்ம பூமியில் ராம்லல்லாவில் பூஜை செய்வார். அங்கு, ராம்லல்லா விராஜ்மன் என்ற குழந்தை ராமர் வழிபாடு மற்றும் பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

*அங்கு பாரிஜாதம் மரக்கன்று ஒன்றை நடுகின்ற பிரதமர் மோடி, பின்னர் விழா நடைபெறும் இடத்தை சென்றடைகிறார். தொடர்ந்து பூமி பூஜை மற்றும் மேடையில் நிகழ்ச்சிகள் நடைபெறும். அப்போது பிரதமர் 5 ரூபாய் தபால் தலையை வெளியிடுகிறார்.

*இதையடுத்து பிரதமர் மோடி சரியாக 12.15 மணிக்கு ராமர் கோவிலுக்கான 40 கிலோ வெள்ளியாலான அடிக்கல்லை பிரதிஷடை செய்வார். மதியம் 12.15 மணியில் அபிஜித் முகூர்த்தம் வருவதால் ராமர் கோவிலின் அடிக்கல் நாட்டலை அந்த நேரத்தில் செய்ய திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

*பூமி பூஜை முடிந்த பின், ஸ்ரீ ராம்ஜென்ம பூமி அறக்கட்டளை உறுப்பினர்களை சந்தித்து உரையாடிய பின் அவர் மீண்டும் டெல்லிக்கு திரும்புவார்.

*அடிக்கல் நாட்டு விழாவின்போது கருவறை அமையும் இடத்தில் வெள்ளியினால் ஆன 5 செங்கல்கள் பதிக்கப்படும். இந்து வேதத்தில் ஐந்து கோள்களைக் குறிக்கும் வகையில் இந்த ஐந்து செங்கல்கள் பாதிக்கப்படுகிறது. கர்ப்ப கிரகம் எண்கோண வடிவில் அமைக்கப்படும்.

சிறப்பு விருந்தினர்களுக்கு வெள்ளி நாணயங்கள்

*இந்த விழாவில் மொத்தம் 175 சிறப்பு  விருந்தினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர்.பூமி பூஜை நடக்கும் நிகழ்ச்சியின் போது, மேடையில் பிரதமர் மோடியுடன், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தரபிரதேச  ஆளுநர் ஆனந்திபென் பட்டேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மஹந்த் நிருத்ய  கோபால்தாஸ் ஆகியோர் இருப்பார்கள்.

*சிறப்பு விருந்தினர்களுக்கு சிறப்பு வெள்ளி நாணயங்கள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேரடி ஒளிபரப்பு :

கொரோனா சமயம் என்பதால் பூமி பூஜைக்கு மக்கள் வரவேண்டாம் என கூறப்பட்டுள்ளதை அடுத்து, பூமி பூஜையை மக்கள் தங்கள் வீடுகளிலிருந்தே பார்க்கும் வகையில், மத்திய அரசின் ஊடகமான தூர்தர்சனில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதன் மூலம் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலிருந்தே கண்டுகளிக்கலாம்.

பாதுகாப்பு :

அயோத்தி விழாவையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மும்பை, டெல்லி, சென்னை, ஐதராபாத், பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழாவில் மோடியும் பங்கேற்பதால் உ.பி.யில் சிறப்புப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Ram Temple ,Modi ,Ayodhya , Ayodhya, Brahmanda, Ram Temple, Design, 40 kg, Silver Brick, Prime Minister Modi, Foundation
× RELATED கேரளாவில் கோயில் திருவிழாவின்போது...