×

ஆயுர்வேதத்தை ஊக்கப்படுத்துவதாக கூறி பாஜக அரசு மூட நம்பிக்கைகளை மருத்துவத்தில் புகுத்துகிறது : இந்திய மருத்துவர் சங்கம் அறிக்கை!!


டெல்லி : மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.புதிய கல்விக் கொள்கை மருத்துவக் கல்வியில் போலி அறிவியலை திணிக்க முயல்கிறது என்று கூறிய நிலையில்,மருத்துவக் கல்வியை கார்ப்பரேட் மயமாக்க மத்திய அரசு முயற்சிக்கிறது என்றும் குலக் கல்வி சாதி அடிப்படையில் தொழில்களை கொண்டு வரும் முயற்சி நடைபெறுகிறது என்றும் மருத்துவர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் விடுத்துள்ள அறிக்கையில், தேசியக் கல்விக் கொள்கை 2020’’ என்ற புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு அறிவித்துள்ளது. அக்கொள்கையை நடைமுறைப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் இந்த தேசிய கல்விக் கொள்கை , அறிவியல் மனப்பான்மையை ஊக்கப்படுத்துவதற்கு எதிராகவும், அறிவியல் ரீதியான உலகப் பார்வையை உருவாக்குவதற்கு எதிராகவும் உள்ளது. இந்தியாவின் நவீன அறிவியல் மருத்துவத்தில் ,மருத்துவ அறிவியலை, அறிவியல் ரீதியாக காலாவதியான மருத்துவக் கோட்பாடுகளை திணிப்பதற்கு முயல்கிறது. ...

மருத்துவக் கல்வியிலும் ,மருத்துவ சிகிச்சைகளிலும், அறிவியலையும் போலி அறிவியலையும் ஒன்றிணைக்கும் முயற்சியை’’ மத்திய அரசு இக்கல்விக் கொள்கை மூலம் செய்ய முயல்கிறது. அறிவியல் மற்றும் மருத்துவ அறிவியல்  ( Medical Science) தோற்றம் மற்றும் வளர்ச்சி பற்றிய அடிப்படை புரிதலின்றி இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. மக்கள் பன்முக மருத்துவ சிகிச்சையை விரும்புகிறார்கள். நமது மருத்துவக் கல்வி முறை ஒருங்கிணைந்ததாக (Our health care education system must be  integrative…)இருக்க வேண்டும். அலோபதி மருத்துவ மாணவர்கள் ஆயுர்வேதா,யோகா,இயற்கை மருத்துவம் ,யுனானி,சித்தா ஹோமியோபதி உள்ளிட்ட  மருத்துவ முறைகளில் அடிப்படை புரிந்து கொள்ளல் உள்ளவர்களாக இருக்க வேண்டும். இதர மருத்துவ முறையினரும் அலோபதி மருத்துவ முறைகளின் அடிப்படைகளை அறிந்திருக்க வேண்டும்’’ எனக் கூறியுள்ளது. இத்தகைய ஒன்றிணைக்கும் போக்கு, எதிர்காலத்தில் பல்வேறு மோசமான விளைவுகளை மருத்துவக் கல்வியில் உருவாக்கும். மருத்துவ சேவையின் தரத்தை பாதிக்கும்.தேவையற்ற குழப்பங்களை மருத்துவ சிகிச்சையில் உருவாக்கும். நவீன அறிவியல் மருத்துவத்தின் மதச்சாற்பற்ற தன்மையை பாதிக்கும்.

ஹோமியோபதி,  நவீன அறிவியல் மருத்துவத்திற்கு எதிராக தோன்றியது. அதற்கு  நேர் எதிரான கோட்பாட்டை கொண்டது. ஹோமியோபதி ஒரு போலி அறிவியல். அதன் கோட்பாடுகள் அறிவியல் அடிப்படைகளற்றது. மருத்துவ ரீதியாக பயனற்றது’’என பல விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.இதனால் இங்கிலாந்து,ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் ஹோமியோபதிக்கு அளித்த ஆதரவை குறைத்துக் கொண்டு வருகின்றன.
 எனவே, ஹோமியோபதி போன்ற, மருத்துவ முறையை நவீன அறிவியல் மருத்துவப் படிப்பில் இணைப்பது  தேவையற்ற குழப்பங்களையே உருவாக்கும். ஹோமியோபதி தவிர, இதர `ஆயுஷ்’ மருத்துவ முறைகளின் , மருந்துகளில் ஏற்கத் தக்கவற்றை மட்டும், நவீன அறிவியல் தொழில் நுட்ப அடிப்படையில் வளர்த் தெடுக்கலாம். மக்களுக்குப் பயன்படுத்தலாம். ஆனால், அறிவியல் ரீதியாக காலாவதியான `ஆயுஷ் ‘’ மருத்துவ முறைகளின் கோட்பாடுகளை, கருத்துக்களை, நோயறிதல் முறைகளை, நோய்களின் வகைப்பாடுகளை, சிகிச்சை முறைகளை பயன் படுத்துவது அறிவியல் அடிப்படையிலான சிகிச்சை முறைகளுக்கு எதிராக அமையும். மருத்துவ சேவை தரத்தை பாதிக்கும். எனவே, ``ஆயுஷ்’’ மருத்துவத்தை நவீன மருத்துவத்துடன் ஒருங்கிணைப்பது என்பது அறிவார்ந்த செயலன்று. அது நடைமுறை சாத்திய மற்ற ஒன்று.

`ஆயுஷ்’ மருத்துவர்களுக்கு, நவீன அறிவியல் மருத்துவத்தில் பயிற்சி அளித்து பயன்படுத்தலாம். அது மருத்துவர்கள் பற்றாக்குறையை போக்க உதவும்.ஆனால், அதே சமயம் , ஆயுஷ் மருத்துவக் கல்லூரிகளை நவீன அறிவியல் மருத்துவக் கல்லூரிகளாக மாற்ற வேண்டும் .இந்தியாவில் அடிப்படை மருத்துவப் படிப்பாக எம்பிபிஸ் மட்டுமே இருக்க வேண்டும். எம்பிபிஎஸ் படிப்பை முடித்தவுடன், ஆயுஷ் படிப்பை முதுநிலை மருத்துவப் படிப்பாக படிக்கும் நிலையை உருவாக்க வேண்டும்.  அதன் மூலம் ஆயுஷ் மருத்துவ முறைகளில் உள்ள மருந்துகளை பற்றி ஆராய முடியும். அவற்றில் பயனுள்ளவற்றை, இன்றைய அறிவியல் தொழில் நுட்ப துணைகொண்டு வளர்த்தெடுக்க முடியும்.  அவற்றில் உள்ள மூலக் கூறுகளை பிரித்தெடுத்து, அவற்றை மக்களுக்கு தேவையான வகையில் பயன்படுத்த முடியும்.

அதுவே மருத்துவ அறிவியலின் வளர்ச்சிக்கு உதவும். அதை விடுத்து ,நவீன அறிவியல் மருத்துவர்கள், `ஆயுஷ்’ படிக்க வேண்டும் என்பது தேவையற்ற கால விரயம். அவசியமற்ற ஒன்று. மாற்று முறை மருத்துவத்தை நாடுபவர்களுக்கு மாற்று முறை மருத்துவர்கள் சிகிச்சை வழங்குவதுதான் சரியாக இருக்கும்.  அதைவிடுத்து,நவீன அறிவியல் மருத்துவக் கல்வியில் ,மாற்று முறை மருத்துவக் கல்வியை திணிப்பது நவீன அறிவியல் மருத்துவத்தை நீர்த்துப் போகச் செய்யும்.  தரமான நவீன சிகிச்சைகள் இந்திய மக்களுக்கு கிடைப்பதற்கும் பெரும் தடையாக அமைந்துவிடும்.  எனவே, இந்த தேசிய கல்விக் கொள்கை 2020 யை , உடனடியாக திரும்பப் பெற வேண்டும், என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags : government ,BJP ,Ayurveda: Indian Medical Association ,UPSC ,Civil ,Founder ,PAC ,Ramadas ,Tamil Nadu , Ayurveda, BJP Government, Close Trust, Indian Medical Association, Report
× RELATED பாஜக அரசின் கையாலாகாத தன்மை : ப.சிதம்பரம் தாக்கு