×

கேரளாவில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க மதரஸா மண்டபத்தை இலவசமாக கொடுத்த இஸ்லாமியர்கள்

கொல்லம்: கேரளாவில் கொல்லம் அருகே கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்ததால், அந்தப் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் தங்களுக்குச் சொந்தமான மதரஸா மண்டபத்தை கொரோனா நோய் சிகிச்சை மையம் அமைக்க இலவசமாக வழங்கியுள்ளனர். அந்தப் பகுதியில் வசிக்கும் பல்வேறு சமூக மக்களின் பங்களிப்போடு, இந்த மையம் அரசின் உயர்தர மருத்துவமனைக்கு இணையாக தயார் செய்யப்பட்டுள்ளது.

கடைக்கல் பகுதியில் அரசு தாலுக்கா மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு கொரோனா நோயாளிகளுக்கான படுக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்ட நிலையில், அரசு அதிகாரிகள் அந்தப் பகுதியில் இருக்கும் பள்ளி, கல்லூரிகளைக் கொரோனா சிகிச்சை மையம் அமைப்பதற்காக தேடி வந்தனர். அப்போது கடைக்கல் பகுதியில் காஞ்சிரத்து மூடு முஸ்லிம் ஜமாத்துக்குச் சொந்தமான, விசாலமான மதரஸா ஹால் ஒன்று இருப்பது தெரியவந்தது.
இந்த மண்டபத்தை கொரோனா சிகிச்சை மையமாக மாற்ற ஜமாத் நிர்வாகிகளை அதிகாரிகள் அணுகிக் கேட்டதுமே அவர்கள் உடனடியாகச் சம்மதித்திருக்கிறார்கள்.

இதையடுத்து இப்போது மதரஸா ஹால் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கும் மையமாக மாறியுள்ளது. இப்போது இதில் 125 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மண்டபம் கிடைத்ததைத் தொடர்ந்து அடுத்தகட்டமாக மருத்துவமனை அமைப்பதற்காக அந்தப் பகுதிவாசிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு செலவை ஏற்றுக்கொண்டனர். இங்கு சிகிச்சையளிக்க வரும் சுகாதாரப் பணியாளர்கள் தங்குவதற்கு வசதியாக அந்தப் பகுதிவாசிகள் இருவர், தங்களது வீடுகளைத் தற்காலிகமாக வழங்கியுள்ளனர். இந்த மையத்தில் இன்று முதல் நோயாளிகள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.



Tags : Islamists ,Madrasa ,Corona ,hall ,treatment center ,Kerala , Kerala, Islamists, Corona
× RELATED உ.பி. அரசின் மதரஸா சட்டம் செல்லாது: ஐகோர்ட் தீர்ப்பு