களக்காடு: களக்காடு அருகே புதையல் எடுக்க ஆண் குழந்தையை நரபலி கொடுக்க முயன்ற போலி சாமியார் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். நெல்லை மாவட்டம் களக்காடு அருகே கீழசடையமான்குளத்தை சேர்ந்தவர் குமரேசன் (39), கூலி தொழிலாளி. இவரது மனைவி ராமலெட்சுமி (35). இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளன. டோனாவூரை சேர்ந்தவர் கிரானராஜன் (64). சாமியாரான இவரும், குமரேசனும் நண்பர்கள். கிரானராஜன் அடிக்கடி குமரேசன் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குமரேசன் வீட்டிற்கு வந்த கிரானராஜன், உனது வீட்டில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள புதையல் உள்ளது. அதை எடுக்க நள்ளிரவில் சில பரிகாரங்களுடன் பூஜை செய்ய வேண்டும். அதற்கு ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் செலவாகும் என்று ஆசைவார்த்தை கூறி உள்ளார். இதை நம்பிய குமரேசன், தனது தாய் பார்வதியிடம் (65) கூற அவரும் புதையல் ஆசையில் உடனடியாக ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தை கிரானராஜனிடம் கொடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் நள்ளிரவில் குமரேசன் வீட்டில் கிரானராஜன் பூஜை நடத்தினார். ஒரு அறையில் 3 அடி நீளம், 2 அடி அகலம், 5 அடி ஆழத்தில் குழி தோண்டி உள்ளனர். அதில் முதலில் கோழியை பலி கொடுத்துள்ளனர். பின்னர் ஒரு பூனையை பலி கொடுக்க வெட்ட முயன்ற போது தப்பி ஓடி விட்டது. இதனால் பூஜையை நிறுத்திய கிரானராஜன், இனி செவ்வாய்க்கிழமை பூஜையை தொடரலாம் என்று கூறி உள்ளார். மேலும் பூனை தப்பி விட்டதால் உனது ஆண் குழந்தைகளில் ஒரு குழந்தையை நரபலி கொடுக்க வேண்டும், இல்லாவிட்டால் உங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்றும் அச்சுறுத்தி உள்ளார். இதனிடையே சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினரும், உறவினர்களும் அங்கு வந்தனர். நரபலி கொடுப்பது பற்றி சாமியார் பேசிக் கொண்டிருந்ததை கேட்ட அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். புகாரின்படி களக்காடு போலீசார் விசாரணை நடத்தி பார்வதி, குமரேசன், போலி சாமியார் கிரானராஜன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். பூனை தப்பி விட்டதால் உனது ஆண் குழந்தைகளில் ஒரு குழந்தையை நரபலி கொடுக்க வேண்டும், இல்லாவிட்டால் உங்களுக்கு ஆபத்து ஏற்படும்.