×

தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் மெதுவாக பரவி வருகிறது: ஐகோர்ட் எச்சரிக்கை; நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் தற்போது துப்பாக்கி கலாச்சாரம் மெதுவாக பரவி வருவதாகவும், இது மாநிலத்துக்கும், நாட்டுக்கும் நல்லதல்ல என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், துப்பாக்கி கலாச்சாரத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியை காட்டி கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்டவரை குண்டர் சட்டத்தில் அடைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் பரவி வருகிறது. குண்டர்கள், கிரிமினல்கள், அரசியல்வாதிகள் துப்பாக்கி உரிமம் வைத்திருக்கிறார்கள். இது சரியல்ல. பீகார், ஜார்கண்ட்டில் இருந்து நாட்டு துப்பாக்கிகள் தமிழகம் வருகின்றன என நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த தமிழக தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன், இதுபற்றி டி.ஜி.பி.,யிடம் தெரிவிப்பதாகக் கூறினார். இதையடுத்து, நீதிபதிகள், உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கிகள் வைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை விட்டு விட முடியாது. நாட்டு துப்பாக்கிகள் பயன்படுத்தி கொள்ளையடித்ததாக பீஹாரைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். நாட்டு துப்பாக்கி பீகாரில் இருந்து வந்திருக்கின்றன. தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் மெதுவாக பரவி வருகிறது. இது நாட்டுக்கும், மாநிலத்துக்கும் நல்லதல்ல. பீகார், ஜார்கண்ட், சத்தீஸ்கரில் இருந்து நாட்டு துப்பாக்கிகள் தமிழகத்தில் ரவுடிகள், குண்டர்கள், அரசியல்வாதிகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது. அரசு உரிய நடவடிக்கைகள் எடுத்து துப்பாக்கி கலாச்சாரத்தை தடுக்க வேண்டும்.

தமிழக உள்துறை செயலாளர், டி.ஜி.பி., மற்றும் சென்னை காவல் ஆணையரை இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்கிறோம். உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி பயன்படுத்தி கொள்ளையடித்ததாக  எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? வட மாநிலங்களில் இருந்து உரிமம் இல்லாத துப்பாக்கிகள் எளிதாக கிடைக்கிறதா? சட்டவிரோதமாக ஆயுதங்கள் விற்றதாக எத்தனை பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்? வெளிநாடுகளில் இருந்தும் ஆயுதங்கள் விற்பனை செய்யப்படுகிறதா? தமிழகத்தில் எத்தனை பேருக்கு துப்பாக்கி உரிமம் வழங்கப்பட்டுள்ளது? உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்ததாக எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? ரவுடி கும்பல் துப்பாக்கிகள் பெற்று கொலை, கொள்ளை, நில அபகரிப்பு குற்றத்தில் ஈடுபடுகின்றனரா? நக்சல்கள், சமூக விரோதிகளும், ஆயுதங்களை வைத்து சட்டம், ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்துகின்றனரா? உள்ளிட்ட கேள்விகளுக்கு 2 வாரங்களில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.



Tags : iCourt ,Tamil Nadu ,Government , In Tamil Nadu, gun culture, iCourt warning; Government
× RELATED வைகை, காவேரி, குண்டாறு இணைப்பு தமிழக...