செங்கல்பட்டு: தனியார் ஆக்கிரமிப்பு செய்துள்ள 15 ஏக்கர், அரசு புறம்போக்கு
நிலத்தை மீட்டு தரக் கோரி, செங்கல்பட்டு கலெக்டரிடம், மதுராந்தகம் அருகே
எடையாளம் கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர், கலெக்டரிடம் நேற்று மனு
அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது. மதுராந்தகம் தாலுகா எடையாளம்
கிராமம் காலனி பகுதியில், 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.
இந்த கிராமத்துக்கு அருகில், 15 ஏக்கர் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த
காலனி மக்கள், அந்த நிலத்தை சுடுகாடாகவும். கால்நடைகளை மேய்ப்பதற்காகவும்
பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில், தனிநபர் ஒருவர் கடந்த 15
ஆண்டுங்களாக அந்த நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளார். மேலும், அங்கு, வீடு,
கார் ஷெட் மற்றும் வேலி அமைத்து, வாடகைக்கு விட்டுள்ளார். இதன் காரணமாக,
இறந்தவர்களை புதைக்கவும், கால்நடைகளை மேய்ப்பதற்கு போதிய இடமில்லாமலும்,
எடையாள கிராம காலனி மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, தனியார்
ஆக்கிரமித்துள்ள, 15 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டு, பொது
பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என கூறப்பட்டுள்ளது.