சென்னை: தளர்வுகள் அறிவித்தாலும், பஸ், ரயில் போன்றவை இயங்கினால் மட்டுமே வாடிக்கையாளர்கள் ஓட்டலுக்கு வருவார்கள் என்று ஓட்டல்கள் சங்க தலைவர் கூறினார். இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர் சங்க தலைவர் வசந்தபவன் ரவி கூறும்போது, ஓட்டல்களில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தளர்வை நடைமுறைப்படுத்த முடியாத நிலை உள்ளது. போக்குவரத்து வசதிகள் இல்லாததால் தொழிலாளர்களால் பணிக்கு வர இயலவில்லை. ஆட்கள் பற்றாக்குறையால் சென்னை முழுவதும் 90 சதவீதம் ஓட்டல்கள் பர்சல் மட்டுமே வழங்குகிறார்கள். மேலும் ஓட்டல் திறக்கப்பட்டிருந்தாலும் பொதுமக்களும் அதிக அளவு வருவதில்லை. போக்குவரத்து வசதிகள் இருந்தால் மட்டுமே வாடிக்கையாளர்கள் அதிகம் வருவார்கள்.
இயல்பான நிலை உருவாகும் வரை ஓட்டல் தொழில் செய்வதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. இதே நிலை நீடித்தால் ஓட்டல் தொழிலாளர்கள் பாதிபேரை மீண்டும் வேலைக்கு அமர்த்த இயலாது. ஓட்டல் தொழிலை காப்பாற்ற அனைத்து தரப்பையும் அழைத்து பேசி அரசு இதற்கு முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆனால் டீக்கடை உரிமையாளர்கள் சங்கம் அரசின் இம்முடிவை வரவேற்றுள்ளது. தளர்வு காரணமாக மூடப்பட்டிருந்த பல டீக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இரவு 7மணி வரை டீகடைகளில் அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்பட்டு இருப்பதால், சென்னையில் உள்ள டீக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.