கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த பன்பாக்கம் கிராமத்தில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கும்மிடிப்பூண்டி கி.வேணு காணொலி காட்சி மூலம் அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கும்மிடிப்பூண்டி, சோழவரம், மீஞ்சூர், பள்ளிப்பட்டு, திருத்தணி, பொதட்டூர்பேட்டை, எல்லாபுரம், ஆர்.கே.பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் வரும் 7ம் தேதி கலைஞரின் 2ம் ஆண்டு நினைவு தினத்தை ஊராட்சிகளில் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய வேண்டும்.
சாதனை விளக்க பதாகைகள் பிடித்து கொண்டாடவேண்டும். இட ஒதுக்கீட்டை பெற்றுத்தந்த தலைவருக்கு நன்றி உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர் திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி கி.வேணு செய்தியாளர்களிடம் பேசுகையில், “மீஞ்சூர் பேரூராட்சியில் உள்ள பெரியார் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை கைது செய்யக்கோரி பேரூர் செயலாளர் மோகன் ராஜ், மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். ஆனால் மாறாக புகார் அளிக்க வந்தவர் மீதே மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை திரும்பப் பெறாவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்” என கூறினார்.