கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இந்நிலையில், தற்போது பெய்த மழையால் கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் இருந்து ரெட்டம்பேடு வழியாக பஜாருக்கு செல்லும் சாலை நடுவே மழைநீர் தேங்கி நிற்கிறது. தேங்கி கிடக்கும் மழைநீருடன் கழிவுநீர் கலந்து குட்டையாக மாறியுள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் ஆத்துப்பக்கம், வழுதலம்பேடு, மங்காவரம், பட்டுபுள்ளி, நத்தம், அயநெல்லுர், குருவி அகரம், அப்பாவரம் உள்ளிட்ட பல்வேறு கிராமப்புற மாணவ, மாணவிகள் மற்றும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர் அவதிப்படுகின்றனர்.
மேலும், அவ்வழியாக தினந்தோறும் கும்மிடிப்பூண்டி பஜார் வழியாக அரசு அலுவலகங்கள் மற்றும் காய்கறி, மளிகை பொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு இருசக்கர வாகனத்தில் செல்வோர் கடும் துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர். மேலும், மழைநீருடன் கழிவுநீர் கலப்பதால் அவர்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திற்கு தகவல் கூறியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள், இந்த சாலையில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையில் கால்வாய் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.