சென்னை: ‘வணக்கம் சென்னை’, ‘அரிமா நம்பி’, ‘வை ராஜா வை’, ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’, ‘எல்கேஜி’ உள்பட பல மொழி படங்களில் ஹீரோயினாக நடித்திருப்பவர், பிரியா ஆனந்த். வெளிநாட்டை சேர்ந்த அவர் சென்னையிலுள்ள வீட்டில் தங்கியுள்ளார். கொரோனா லாக்டவுன் காரணமாக சினிமா படப் பிடிப்புகள் நடக்கவில்லை. இந்நிலையில், தெலங்கானா மாநிலத்தில் பல்வேறு நிபந்தனைகளுடன் சினிமா படப்பிடிப்புகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு நடக்கும் படப்பிடிப்பில் பங்கேற்று நடிக்கும் பிரியா ஆனந்த் கூறியதாவது: கொரோனா தொற்றில் இருந்து காப்பாற்றிக்கொள்ள கடுமையாக போராட வேண்டியிருக்கிறது. இதுவரை நாம் பாதுகாப்பாக இருந்துகொண்டது போல், இனி வரும் நாட்களிலும் நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். தற்போது ஐதராபாத்தில் உள்ள பிலிம்சிட்டியில் நடக்கும் ‘சிம்பிள் மர்டர்’ என்ற இந்தி வெப்சீரிஸில் நடிக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் அனைத்து பாதுகாப்பு விதிகளையும் கடைபிடிக்கிறோம்.