அண்ணாநகர்: சென்னை மாநகரில் கொரோனா பரவலை தடுக்க அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதிகாரிகள் அவ்வப்போது சோதனை நடத்தி, விதிமீறும் கடைகள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் இ-சேவை மையத்தில் ஊழியர்கள் முகக்கவசம் அணியாதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாநகராட்சி, 8வது மண்டலத்திற்கு உட்பட்ட அமைந்தகரையில் இ-சேவை மையம் செயல்படுகிறது.
இங்கு வேலை செய்யும் ஊழியர்கள் அனைவரும் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் உள்ளனர். இதனால் அங்கு வரும் பொதுமக்களுக்கு நோய்தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும், இங்கு வருமான சான்றிதழ், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் பெற வரும் மக்களிடம், அங்குள்ள ஊழியர்கள் குறிப்பிட்ட தொகையை லஞ்சமாக வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.