×

சாதியை காரணம் காட்டி பிரிக்கின்றனர்; காதல் கணவரை சேர்த்து வைக்க கோரி வள்ளியூர் நடிகை காவல்நிலையத்தில் கதறல்: பலருடன் தொடர்பு என கூறி ஏற்றுக்கொள்ள வாலிபர் மறுப்பதால் பரபரப்பு

இடைப்பாடி: வள்ளியூரை சேர்ந்த துணை நடிகை, தனது காதல் கணவரை சேர்த்து வைக்க கோரி, காவல்நிலையத்தில் கதறி அழுதார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியை சேர்ந்தவர் ஷீலா (32). சினிமா, டிவி சீரியல் துணை நடிகை. இவர், சேலம் மாவட்டம் இடைப்பாடி காவல்நிலையத்திற்கு வந்து இன்ஸ்பெக்டர் செந்திலிடம் ஒரு மனு கொடுத்தார். அதில், இடைப்பாடி பகுதியை சேர்ந்த சவுந்தர்ராஜன் (31) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்துகொண்டோம். ஆனால், ஜாதியை காரணம் காட்டி சவுந்தர்ராஜனின் தாய் பழனியம்மாள் எங்களை பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

மேலும், சவுந்தர்ராஜனுக்கு வேறு திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். நாங்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தபோது, எனது ஏடிஎம் கார்டை கைப்பற்றி அதில் இருந்த பணம் முழுவதையும் எடுத்துக்கொண்டனர். நகை மற்றும் பொருட்களையும் அபகரித்துவிட்டனர். ஆனால், சேர்ந்து வாழவிடாமல் தடுத்து வருகின்றனர்’ என தெரிவித்திருந்தார். மேலும், காதல் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கதறி துடித்தார். இதன்பேரில், இன்ஸ்பெக்டர் செந்தில் இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, பலருடன் தொடர்பு உள்ளதாக கூறி, ஷீலாவுடன் சேர்ந்து வாழ முடியாது என சவுந்தர்ராஜன் மறுத்துவிட்டார்.

இதனை கண்டித்து அவரது வீட்டின் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஷீலா எச்சரிக்கை விடுத்தார். அப்போது, ஊரடங்கு அமலில் உள்ளதால் போராட்டத்திற்கு அனுமதியளிக்க முடியாது என போலீசார் தெரிவித்தனர். பின்னர், நீதிமன்றத்தை அணுகி பிரச்னைக்கு தீர்வு காணுமாறு கூறி இருதரப்பினரையும் போலீசார் அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் இடைப்பாடி காவல்நிலையம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags : actress ,police station ,Valliyoor , Caste, romantic husband, Valliyoor actress police station, roar
× RELATED வெறுப்பு பேச்சு: பிரதமர் மோடி மீது...