பெங்களூர்: கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த நிலையில் பெங்களூரு மக்களுக்கு இலவச கொரோனா பரிசோதனை செய்ய மாநகராட்சி முடிவு செய்து உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்: பெங்களூருவில் தனியார் மருத்துவமனைகள், ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள ரூ.5 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில் ஏழை, எளிய மக்கள் தங்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த விரும்புவது இல்லை. இதன்காரணமாக மாநகராட்சி சார்பில் 8 மண்டலங்களிலும் பெங்களூரு மக்களுக்கு இலவசமாக கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்து உள்ளோம். இது தொடர்பாக மண்டல அலுவலக செல்போன் எண்களை தொடர்பு கொண்டு மக்கள் இலவச கொரோனா பரிசோதனை குறித்து தகவல்களை பெற்றுக் கொள்ளலாம். இதனால் ஏழை, எளிய மக்களும் தங்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி கொள்வார்கள். இதன்மூலம் நோய் பரவுவதை கட்டுப்படுத்த நாங்கள் விரும்புகிறோம் என்று தெரிவித்தார்.
மேலும், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு 50 ஆயிரம் ரேபிட் ஆன்டிஜென் கருவிகளை அரசிடம் இருந்து பெற்று இருந்தோம். அந்த கருவிகள் மூலம் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு உள்ளோம். 70 நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனங்களை நகர் முழுவதும் அனுப்பி உள்ளோம். இலவச கொரோனா பரிசோதனை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். பெங்களூருவில் 12,668 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, பெங்களூருவில் கொரோனா பாதித்தவர்கள் தொடர்பு கொள்ள வசதியாக மண்டலம் வாரியாக மாநகராட்சி உதவி மையங்களை அமைத்துள்ளது.
மண்டல வாரியாக உதவி மையங்களின் தொலைபேசி எண்கள் விவரம்:
* எலகங்கா - 9480685948
* மகாதேவபுரா - 080-23010101/ 23010102
* பொம்மனஹள்ளி - 8884666670
* ஆர்.ஆர்.நகர் - 080-28601050/ 28600954
* பெங்களூரு தெற்கு - 8431816718
* பெங்களூரு கிழக்கு - 7411038024
* பெங்களூரு மேற்கு - 080-68248454
* தாசரஹள்ளி - 080-28394909/3688