×

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா தொற்று உறுதி..: ஆளுநரின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தகவல்!

சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், 7ம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் அரசு அதிகாரிகள், காவல்துறையினர், மருத்துவர்கள்,  சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோருக்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆளுநர் மாளிகையில் உள்ள ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டதில் 84 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன் 38 பேருக்கு பரிசோதனை செய்ததில் 3 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. ஆளுநர் உதவியாளர் தாமசும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.  

இதையடுத்து ஆளுநர் பன்வாரிலால்  புரோகித்திற்கு மருத்துவர்கள் மேற்கொண்ட வழக்கமான மருத்துவப் பரிசோதனையில் அவர் ஆரோக்கியமாக இருப்பது தெரியவந்தது. இருந்தபோதும் அவர் தன்னை 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டுமென மருத்துவர்கள்  அறிவுறுத்தினர். இதையடுத்து ஆளுநர் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டதாக ஆளுநர் மாளிகை தெரிவித்தது. இந்தநிலையில் இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பரிசோதனைக்காக சென்றிருந்தார். இந்நிலையில் அவருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், தொற்றுக்கான அறிகுறி பெரிய அளவிற்கு இல்லாததாலும்,  ஆளுநரின் உடல்நிலை சீராக உள்ள காரணத்தினாலும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதனையடுத்து, கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தன்னை தானே ஆளுநர் பன்வாரிலால் தனிமைப் படுத்திக்கொண்டுள்ளார்.

Tags : Governor ,Purohit ,Tamil Nadu ,Banwarilal , Governor of Tamil Nadu Banwarilal Purohit, Corona, Rajpavan
× RELATED ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்