சென்னை: சென்னையில் சட்டவிரோதமாக ஆன்லைனில் லாட்டரி நடத்திய 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழத்தில் லாட்டரி சீட்டு நடத்துவது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் ஆன்லைனில் லாட்டரி நடத்துவதாக சென்னை போலீசுக்கு புகார் வந்துள்ளது. இதன்பேரில் விசாரணை நடத்திய காவல் துறை தங்கம் லாட்டரி என்ற பெயரில் சென்னையின் பல்வேறு இடங்களில் துண்டு பிரசுரம் விநியோகம் செய்தது தெரியவந்தது. கேரளா போன்ற மற்ற மாநிலங்களில் ஆன்லைனில் லாட்டரி நடத்தப்படுவது போன்று, பரிசுத்தொகை தருவதாக விளம்பரம் செய்ததையும் போலீசார் கண்டறிந்தனர்.
அதாவது சென்னை தாம்பரம் பகுதியில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்த கும்பல் தற்போது ஊரடங்கு காரணமாக ஆன்லைனில் லாட்டரி நடத்தி வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் ராசிரங்கா என்பவரின் தலைமையில் செயல்பட்ட முருகானந்தம், செல்வம் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பலை கைது செய்துள்ளனர். அவர்களை தற்போது சென்னை சாத்தாங்காடு காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர்களுடன் தொடர்புடைய மற்றவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.