×

கொரோனா வைரஸ் கோர தாண்டவமாடும் நிலையில் மக்களை மிரட்டுது டெங்கு...! தடுப்பு நடவடிக்கையில் இறங்குமா தமிழக அரசு?

மதுரை: புது ரவுடி வந்தால், பழைய ரவுடிக்கு மவுசு குறையுற மாதிரி, கொரோனா வைரஸ் முழுவேகத்துல பரவுவவதால் நாம கிட்டத்தட்ட டெங்குவை மறந்தே விட்டோம். மழைக்காலம் வந்தாலே ‘உள்ளேன் ஐயா...’ என கடந்த சில ஆண்டுகளாக நம்மை பாடாய்படுத்திய டெங்கு, தற்போது மழைக்காலம் துவங்கி உள்ள நிலையில் மெல்ல மெல்ல பரவி வருகிறது. ஏற்கனவே லேசான காய்ச்சல் வந்தால், ‘கொரோனாவா இருக்குமோ...’ என்ற அச்சம் மக்களிடையே இருந்து வருகிறது. இந்த நேரத்தில் டெங்குவும் பரவுவது மிகவும் ஆபத்தானது.

கொரோனாவை போலவே டெங்குவை தடுக்கவும் சிறப்பு முகாம்களை அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டுமென எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. காய்ச்சல்னாலே ஒரு வைரஸ் தொற்றால் ஏற்படக்கூடியதுதான். அதன் வீரியத்தை பொறுத்தே ஒருவரது உடல்நிலை முன்னேற்றமடைவதும், பின்னடைவு அடைவதும் நடக்கிறது. மலேரியா, டைபாய்டு, சிக்கன்குனியா... இந்த வரிசையில சேர்ந்து கடந்த சில ஆண்டுகளாக பல உயிர்களையும் பலி வாங்கிய இந்த டெங்குவை பற்றி தெரிந்து கொள்வோம்.

டெங்குன்னா என்ன?
பொதுவாக, கழிவுநீர் தேங்கிக்கிடக்கும் இடத்தில் கொசுக்கள் மொய்ப்பது வழக்கமானது. ஆனால், ‘ஏடிஎஸ்’ எனப்படும் கொசுக்கள் நல்ல நீரில் வளரக்கூடியது. இவைகள் டெங்குவை பரப்பும் ‘கொள்கை பரப்பு செயலாளர்கள்’. பகல் நேரங்களில் உங்களை ஒரு கொசு கடித்தால் உஷாராக இருக்கணும். அது ஏடிஸ் வகை கொசுவாகவும் இருக்கலாம். அதை எப்படி கண்டுபிடிக்கிறதுன்னு கேட்குறீங்களா? வெயிட்... அதாவது, உடலில் வெள்ளை, கருப்பு நிறப்புள்ளிகளை கொண்டிருக்கும்.

‘மழையின் நண்பன்’ :
டெங்கு கொசுக்கள் பெரும்பாலும் மழைக்காலங்களில்தான் அதிகம் பரவும். காரணம், மழையினால் நம் வீடுகள், தெருக்களில் தண்ணீர் தேங்கி நிற்கும். இந்த நீர் டெங்கு கொசுவின் முட்டைகள் வளர்வதற்கு ஏற்ற ஒரு சூழலை உருவாக்குகிறது. எனவே, மழைக்காலங்களில் வீட்டை சுற்றிலும் கிடக்கும் தேங்காய் சிரட்டை, டயர், பிளாஸ்டிக் டப்பாக்கள், பள்ளமான பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது மிகவும் நல்லது. தூய்மைப்படுத்தாத சிமென்ட் தண்ணீர் தொட்டியிலும் இவை வாழக்கூடியவை.எனவே, நீண்ட நாட்கள் பயன்படுத்தாத தண்ணீர் கூட ஆபத்துதான்.

எப்படி கண்டுபிடிப்பது
இப்ப ஒரு டவுட் வரும். டெங்கு காய்ச்சல் என்பதை எப்படி கண்டுபிடிப்பீர்கள் என்று? கொரோனாவை போலவே இதற்கும் பல அறிகுறிகள் உண்டு. உடல் சோர்வடையும், காய்ச்சல், தலைவலி, அடிக்கடி வாந்தி, வயிற்று வலி, கடுமையான உடல் வலி, பல்லிடுக்கில் ரத்தம், உடலில் சிவப்பு நிறப்புள்ளிகள் தோன்றுகிறதா? உஷாராயிடுங்க... இதுதான் டெங்குவின் முக்கிய அறிகுறிகள். பொதுவாகவே, எந்த காய்ச்சல் என்றாலும் 3 நாட்களுக்கு மேல் நீடித்தால் அது ஆபத்தான காய்ச்சல் வகையாக இருக்கலாம். அப்போது நாம் கண்டிப்பாக டாக்டரை அணுகி, அவர் கூறும் ரத்த மாதிரி பரிசோதனைகளை கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும்.

அடுத்து என்ன செய்வது
டெங்கு ரத்த பரிசோதனையில் பொதுவாக, தட்டணுக்கள் எண்ணிக்கை பரிசோதிக்கப்படும். மனித உடலில் தட்டணுக்கள் எண்ணிக்கை 1.50 லட்சம் முதல் 4 லட்சம் வரை இருக்க வேண்டும். ஆனால், டெங்கு பாதித்த நபருக்கு தட்டணுக்கள் மிகவும் குறைந்து சிலருக்கு 20 ஆயிரம் முதல் 10 ஆயிரம் என கடுமையாக குறைந்து விடும். இது மிகவும் ஆபத்தான நிலை. இந்த நேரத்தில்தான் தட்டணுக்களை உடலில் செலுத்தி, நம் உடலில் அதன் எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய வேண்டும்.

விருதுநகரில் கடும் பாதிப்பு
தமிழகம் முழுவதும் 2015ல் பரவிய டெங்கு காய்ச்சல் விருதுநகர் மாவட்டத்தில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தியது. மாவட்டத்தில் குழந்தைகள், முதியவர்கள் என 54 பேர் வரை உயிரிழந்தனர். தினசரி உயிரிழப்புகள் ஏற்பட்ட போதும், அரசு தரப்பில் டெங்கு மரணங்களை பிற காரணங்கள் கூறி இருட்டடிப்பு செய்தனர். அதே வகையில் இன்று வரையும் டெங்கு மரணங்கள் மறைக்கப்பட்டு வருகின்றன. அதிகபட்சமாக ராஜபாளையம் பகுதியில் 38க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அப்போது சுகாதாரத்துறை செயலாளாராக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன், கலெக்டர் ராஜாராம், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ராஜேந்திர பாலாஜி, உதயகுமார் உள்ளிட்டோர் ராஜபாளையத்தில் முகாமிட்டு ஏடிஎஸ் கொசுவை ஒழிப்பு, சுகாதார நடவடிக்கையில் முழு மூச்சாக இறங்கி செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

மர்ம காய்ச்சலா?
விருதுநகர் மாவட்டம் மட்டுமின்றி டெங்கு காய்ச்சல் இறப்பை மர்ம காய்ச்சல் என மூடி மறைத்ததாகவும் புகார் எழுந்துள்ளது. இதற்கு நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு நல்ல பலனை தந்தது. இதையடுத்து தமிழக அரசும் டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு குடிநீரை பரிந்துரைத்தது. இவற்றோடு காய்ச்சல், உடல்வலியை போக்கும் மாத்திரைகள் தரப்படும். உடல் நீர்ச்சத்து குறையாமல் இருப்பதற்காக குளுக்கோஸ் ஏற்றப்படும். சிலருக்கு தட்டணுக்கள் ஏற்றப்படலாம். சிகிச்சைக்கு அனுமதித்த ஒவ்வொரு நாள் அல்லது 2 நாட்களுக்கு ஒரு முறை தட்டணுக்களை பரிசோதிப்பது நல்லது.

சிகிச்சையின்போது கொசுக்கள் நம்மை சூழாமல் இருக்க வேண்டும். டெங்குவால் பாதிக்கப்பட்டவரை கடித்த கொசு, மற்றொருவரை கடித்தாலும் டெங்கு பரவும் வாய்ப்புள்ளது. தற்போது தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக அரசு மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களும் தங்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதன் மூலம் டெங்குவை ஓட... ஓட விரட்டி அடிக்கலாம்.

நிலவேம்பு... தரும் தெம்பு...
டெங்கு நோயை கட்டுப்படுத்த முடியாமல் தமிழக அரசும், சுகாதாரத்துறையும் திணறியபோது நிலவேம்பு குடிநீர் (கஷாயம்) நல்ல பலனை தந்தது. நிலவேம்போடு மேலும் பல மூலிகைகள் கலந்திருப்பதால் நல்ல எதிர்ப்பு சக்தியுடன் காய்ச்சலை விரட்டுகிறது. காய்ச்சல் இருப்பவர்கள் மட்டுமல்ல... இல்லாதவர்களும் அருந்தலாம். குழந்தைகள் 15 முதல் 25 மிலி வரையும், 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 15 முதல் 40 மிலி வரை அருந்தலாம். காலையில் வெறும் வயிற்றிலும், மாலையிலும் எடுத்துக் கொள்வது சிறப்பு. பப்பாளி இலையை நன்றாக காய வைத்து காய்ச்சியும் சாறு போல எடுத்தும் அருந்தலாம். பொடியாகவும் நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கிறது.

எத்தனை வகை?
டெங்குவை பொறுத்தவரை, டென்-1 (DENV-1), டென்-2 (DENV-2), டென்-3 (DENV-3), டென்-4 (DENV-4) என 4 வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான விளைவுகளை ஏற்படுத்தும். முதல் 2 வகை ஆபத்தானவை.

வேறு என்ன சாப்பிடலாம்?
டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணெய் பலகாரங்களை குறைப்பது நல்லது. வயிற்று வலி, குமட்டல் இருப்பதால் காரமில்லா உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். 2 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் பருக வேண்டும். ஆப்பிள் ஜூஸ் அருந்தலாம். சீரகத்துடன் கொதிக்க வைத்த தண்ணீரை வடிகட்டியும், இளநீரையும் குடிக்கலாம். பொன்னாங்கண்ணி, மணத்தக்காளி சூப் சாப்பிடலாம்.

டெங்கு தொற்றுநோயா?
டெங்கு காய்ச்சல் ஒரு சில மாவட்டங்களில் அதிகமாக பரவுவதால், தொற்று நோயாக இருக்கலாமோ என்ற சந்தேகம் பொதுவாக நிலவுகிறது. ஏடிஸ் வகை பெண் கொசுக்கள் கடிக்கும் நபருக்கே டெங்கு முக்கியமாக பரவும். அதே நேரம் டெங்கு பாதித்தது தெரியாமல் ஒருவர் ரத்த தானம் செய்தால், அவர் மூலமாகவும் பிறருக்கு பரவும் வாய்ப்புள்ளது. மற்றபடி கொரோனா போல நேரடியாக பரவ வாய்ப்பில்லை.

குழந்தைகள் கவனம்
டெங்குவை பொறுத்தவரை சிறுவர்களுக்கு 3 நாட்களுக்குள் காய்ச்சல் குறைந்துவிடும். அதற்காக அலட்சியம் காட்டக்கூடாது. அதற்கடுத்த நாட்களில் ஈறுகளில் ரத்தக்கசிவு, உடலில் சிவப்பு நிற தடுப்பு தடுப்புகளாக ஏற்படும். மலம் கருப்பாக இருக்கும். எனவே, தொடர் காய்ச்சல் உள்ளவர்கள், இதுபோன்ற மாற்றங்களையும் உற்றுநோக்க வேண்டும். காய்ச்சல் குணமடைந்தாலும் வீட்டில் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும்.

கொரோனா - டெங்கு என்னதான் வித்தியாசம்?
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டெங்குவால் உயிர்ப்பலிகள் அதிகம் ஏற்பட்டன. இதனால் பலர் தற்போது கொரோனா போல அதிகம் அச்சப்பட்டனர். மற்றபடி, காய்ச்சல், தலைவலி, உடல் வலி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பொது அறிகுறிகள் இரண்டுக்கும் ஒரே மாதிரியாகவே உள்ளன. கொரோனாவை பொறுத்தவரை நிமோனியா பாதிப்பு போல, சுவாசக்குழாயில் வைரஸ் தொற்று புகுந்து பாதிப்பை ஏற்படுத்துவதால், மூச்சுத்திணறலாகி சில நேரங்களில் உயிரிழப்பு ஏற்படுகிறது. டெங்குவை பொறுத்தவரை தட்டணுக்கள் குறைபாடாகி மரணம் ஏற்படுகிறது. எனவே, இயற்கையாகவே உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும்.

பலியானவர்கள் விபரம்
தமிழகத்தில், டெங்கு காய்ச்சலால் கடந்த 2015ம் ஆண்டு 4,535 பேர் பாதிக்கப்பட்டனர். அதில் 12 பேர் பலியாகினர். 2016ம் ஆண்டு 2,531 பேர் பாதிக்கப்பட்டனர். 2 பேர் பலியாயினர். 2017ம் ஆண்டு 23,294 பேர் சிகிச்சை பெற்று, 63 பேர் பலியாகினர். 2018ம் ஆண்டு 4,486 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு 13 பேர் பலியாகினர். 2019ம் ஆண்டில் 3,223 பேர் பாதிக்கப்பட்டு, 3 பேர் பலியாயினர். டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படும் நோயாளிகளுக்கு, முதல்வரின் ஒருங்கிணைந்த விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை வழங்கப்படுகிறது.

நீங்களே களமிறங்கலாம்
* நன்னீரில் வளரும் கொசுக்கள் கடிப்பதாலே டெங்கு உருவாகுவதால், நமது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
* தண்ணீர் தேங்கும் அளவுக்கு நம் வீட்டுப்பகுதியிேலோ, அல்லது வீட்டருகே, தெருக்களில் இருந்தாலும் அதை அகற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.
* ஈரமான பகுதிகளில் ப்ளீச்சிங் பவுடர் போட்டும் தூய்மைப்படுத்தலாம்.

பழநியை பந்தாடிய டெங்கு
திண்டுக்கல் மாவட்டம், பழநி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த 2017-18ம் ஆண்டில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் பாதிப்பு அதிகளவு இருந்தது. சுமார் 22க்கும் மேற்பட்டோர் டெங்கு, பன்றி மற்றும் மர்மக்காய்ச்சலுக்கு பலியாயினர். தமிழகத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்ட இடமாக பழநி பகுதி மாறியது. இந்த விஷயம் சட்டமன்றத்தில் பழநி எம்எல்ஏ ஐபி செந்தில்குமார் மூலம் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதன்பின்பு, சென்னையில் இருந்து சுகாதாரத்துறை உயரதிகாரிகள், பழநி அரசு மருத்துவமனையை ஆய்வு செய்து தனி வார்டு ஏற்படுத்தினர். நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு இவை கட்டுக்குள் வந்தது.

டெங்கு அறிகுறிகள் என்னென்ன?
* ஏடிஸ் வகை கொசு கடித்த 4 முதல் 7 நாட்களுக்குள் அதிக காய்ச்சல் வெளிப்படும். பொதுவாக, டெங்குவின்போது காய்ச்சல் அதிகளவை எட்டும் என்பதால், வெப்பநிலையை அடிக்கடி கண்காணிக்க வேண்டும்.
* ரத்த, வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கத்துடன் காணப்படும்.
* கடும் தலைவலி ஏற்படும். இத்துடன் காய்ச்சல் இருந்தால் கூடுதல் கவனம் காட்ட வேண்டும்.
* உடல்வலி மற்றும் எலும்பு இணைப்புகளில் அதிக வலி ஏற்படும். குறிப்பாக, மூட்டு வலி அதிகமாக இருக்கும்.
* உடலில் சிவப்பு நிற தடிப்புகள் தோன்றும். எதிர்ப்பு சக்தி குறைவான சிலருக்கு அதிலிருந்து ரத்தம் வடியலாம். சிலருக்கு கண்களும் சிவப்பாக தோன்றும்.
* சிலருக்கு கடும் வயிற்று வலி, குமட்டல், வாந்தி உள்ளிட்ட உபாதைகளும் ஏற்படும்.

Tags : government ,corona virus strikes ,Tamil Nadu , Corona virus, dengue, preventive measures, Government of Tamil Nadu
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...