×

சந்திரயான்-2 விண்கலத்தின் லேண்டர், ரோவர் கருவிகள் சேதமில்லை...!! தமிழ்நாட்டை சேர்ந்த விண்வெளி ஆய்வாளர் ஆதாரத்துடன் விளக்கம்!!!

பெங்களூரு: நிலவை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்துடன் இணைக்கப்பட்ட லேண்டர் மற்றும் ரோவர் கருவிகள் சேதமடையவில்லை என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. சந்திரயான்-2 விண்கலம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி நிலவின் தென்துருவத்தில் தரையிறக்கப்பட்டது. இதனுடன் இணைக்கப்பட்ட விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் கருவிகள் தனித்தனியாக பிரிந்து சென்ற பின்னர், தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து விக்ரம் லேண்டர் கருவியின் நிலை மர்மமானது.

இந்நிலையில் மதுரையை சேர்ந்த விண்வெளி ஆய்வாளர் சண்முக சுப்ரமணி, விக்ரம் லேண்டர் குறித்த புகைப்படத்தை இந்திய விண்வெளி ஆய்வு கழகம் இஸ்ரோவிற்கு அனுப்பிவைத்தார். இதனைத்தொடர்ந்து, அந்த ஆய்வுகள் குறித்து மேலும் ஆய்வு செய்யப்பட்டன. பின்னர் ஆய்வின் முடிவில் அது விக்ரம் லேண்டர் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. தற்போது, பிரக்யான் ரோவர் செயல்பட்டதற்கான நாசா புகைப்படங்களை மேற்கோள்காட்டி சுப்ரமணி அவருடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் நிலவின் மேற்பரப்பிலிருந்து 2 மீட்டர் ஆழத்தில் விக்ரம் லேண்டர் கிடப்பதாகவும், ரோவர் கருவி அங்கிருந்து சில மீட்டர் தொலைவில் உள்ளதாகவும் கூறியுள்ளார். விக்ரம் லேண்டர் பிறப்பித்த உத்தரவின்படியே ரோவர் கருவி செயல்பட்டிருக்கலாம் என்பது சண்முக சுப்ரமணியின் கருத்தாக உள்ளது. மேலும், இதுகுறித்து நாசாவிடமிருந்து தகவல் ஏதும் கிடைக்கவில்லை என்றும் சண்முக சுப்ரமணியின் தகவலின் அடிப்படையில் ஆய்வு செய்து வருவதாகவும் இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார். மேலும், இது உறுதிப்படுத்தப்பட்டால், சந்திரயான்-2 திட்டத்தில் இவை முக்கிய திருப்பமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : spacecraft ,Tamil Nadu ,astronaut , Chandrayaan-2, lander, rover instrument, astronaut
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...