சென்னை: தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து முதல்வர், துணை முதல்வர் மரியாதை செலுத்தினர். தீர்த்தகிரி என்ற இயற்பெயர் கொண்ட தீரன் சின்னமலை 1756-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி பிறந்தார். கிழக்கிந்திய கம்பெனி படையினர் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க பல்வேறு கட்டங்களாக போர் புரிந்து வந்த இவர், சூழ்ச்சி மூலம் கைது செய்யப்பட்டு, சங்ககிரி கோட்டையில் 1805-ம் ஆண்டு ஆகஸ்ட் 3-ம் தேதி தூக்கி லிடப்பட்டார்.
இதற்கிடையே, சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையைப் பெருமைப்படுத்தும் விதமாக, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குத் தீரன் சின்னமலை மாளிகை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமிழக அரசின் சார்பில் ஓடாநிலைக் கோட்டையில் சின்னமலை நினைவு மணிமண்டபம் உள்ளது. இதனைபோல், தீரன் சின்னமலைக்குத் தமிழக அரசு சென்னையில் உருவச்சிலை ஒன்றை அமைத்ததுள்ளது. ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில் ஆகஸ்ட் 3-ம் தேதி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
இந்நிலையில், சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினமான இன்று, கிண்டி தொழிற் பேட்டை வளாகத்தில் உள்ள அவரது நினைவு இடத்தில், அவரது சிலைக்கு மாலைகள் அணிவித்து, தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, அமைச்சர் டி. ஜெயக்குமார், அமைச்சர் எம்..ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். மேலும், சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலை படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.