×

புதிய கல்விக் கொள்கை குறித்து பிரதமர் மோடி விளக்கம்: வேலை கொடுப்பவர்களை உருவாக்குவதே நோக்கம்

புதுடெல்லி: ‘புதிய கல்விக் கொள்கை மொழிப்பாடத்திற்கு முக்கியத்துவம் தரக் கூடியது’ என கூறியுள்ள பிரதமர் மோடி, ‘வேலை தேடுபவர்களை அல்ல, வேலையை உருவாக்கும் ஆற்றல் படைத்தவர்களாக மாணவர்களை உருவாக்குவதே புதிய கல்விக் கொள்கையின் நோக்கம்’ எனவும் விளக்கம் அளித்துள்ளார். நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத் திட்டத்திற்கான, ‘புதிய கல்விக் கொள்கை -2020’க்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த 2 நாட்களுக்கு முன் ஒப்புதல் அளித்தது. இந்த புதிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ள மும்மொழிக் கொள்கை, ஒருங்கிணைந்த தொழிற்கல்வி, சமஸ்கிருதத்தை தேசிய நீரோட்டத்தில் சேர்த்தல் போன்ற அம்சங்கள் பல மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளன.

இந்நிலையில், இளைஞர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் இறுதிப் போட்டிக்கான நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் நேற்று உரையாற்றினார். அப்போது, புதிய கல்விக் கொள்கை குறித்து விளக்கமளித்து அவர் பேசியதாவது:
நாட்டின் கல்வித் தரத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். நமது கல்வி முறை  மாணவர்களுக்கு மேம்பட்டதாகவும், நவீனமானதாகவும் மாற்றுவதே எங்கள் முயற்சி. 21ம் நூற்றாண்டு அறிவின் சகாப்தம். கற்றல், ஆராய்ச்சி, புத்தாக்கம் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துவதற்கான நேரம் இது. இதைத்தான் புதிய தேசிய கல்விக் கொள்கையும் வலியுறுத்துகிறது. 21ம் நூற்றாண்டு இளைஞர்களின் விருப்பத்தை புதிய கல்விக் கொள்கை பிரதிபலிக்கிறது. புதிய கல்விக் கொள்கை, மாணவர்களை கட்டாயப்படுத்தாமல், அவர்கள் விரும்பும் பாடங்களை பயில வழிவகுக்கிறது. முந்தைய கல்வி முறை மாணவர்கள் விரும்பும் பாடங்களை தேர்ந்தெடுக்க அனுமதிக்கப்படவில்லை.

ஆனால், புதிய கல்விக் கொள்கையில், கலைக்கல்லூரி மாணவர்கள் கணிதத்துடன் மனிதநேய பாடப்பிரிவை எடுத்து படிக்கலாம். அல்லது ஒரு அறிவியல் பாடப்பிரிவு மாணவர் வரலாற்றை விருப்ப பாடமாக எடுத்து படிக்கலாம். வெறும் ஒரு பாடம் மட்டுமே ஒரு மாணவனின் திறமையை தீர்மானித்து விடாது.  புதிய கல்விக் கொள்கையில், பொதி மூட்டை போல புத்தகப் பையை சுமந்து செல்வதும் குறைக்கப்படுகிறது. தற்போதைய கல்வி முறையில் உள்ளது போன்று வெறுமனே படிப்பை மனப்பாடம் செய்வதால் ஒரு பலனும்  இல்லை. வெறும் பாடத்தின் அறிவு மட்டும் மனிதனை உருவாக்கி விடாது. ஏழைகள், உதவி தேவைப்படுவோருக்கான சிறந்த வாழ்க்கையை வழங்குவதற்காக, ‘வாழ்தலை எளிதாக்கும்’ இலக்கை அடைய தேசத்திற்கு இளைஞர்களின் பங்கு முக்கியமானது.

கல்விக் கொள்கையில் மாற்றங்களால் இந்திய மொழிகள் மேலும் வளரும். புதிய கல்விக் கொள்கையில் தாய்மொழிகளுக்கு முக்கியத்துவம் தரப்படும். பல வளர்ந்த நாடுகள் அவரவர் தாய்மொழியிலேயே கல்வி கற்பிக்கின்றனர். தாய்மொழியின் மூலம்தான் ஒருவரின் முழு திறமையும் வெளிப்படும். புதிய கல்விக் கொள்கையில், 5ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆரம்ப பள்ளியில் உள்ளூர் மொழியுடன் பிராந்திய மொழியுடன் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தாய்மொழி மட்டுமின்றி, பிராந்திய மொழி அறிவையும் மாணவர்கள் பள்ளிப்பருவத்திலேயே பெற முடியும். இந்தியாவின் பலதரப்பட்ட மொழிகளின் மேன்மையை அறிந்து கொள்ள முடியும்.

வேலைவாய்ப்பை தேடாமல், வேலை வாய்ப்பை உருவாக்கும் ஆற்றல் படைத்தவர்களாக மாணவர்களை உருவாக்குவதே புதிய கல்விக் கொள்கையின் நோக்கம். கற்பது, கேள்வி கேட்பது, தீர்வை தருவது - ஆகிய மூன்றையும் மாணவர்கள் விடக் கூடாது. நீங்கள் கற்றுக்கொள்ளும் போதுதான், கேள்வி ஞானத்தை பெறுவீர்கள். புதிய கல்விக் கொள்கை மூலம், அனைவருக்கும் கல்வி என்பது உறுதி செய்யப்படும். மாணவர்களின் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக அனுபவங்கள் மிக இனிமையானதாகவும் விசாலமானதாகவும் மாற்றப்படும். உங்களின் இயல்பான ஆர்வங்களே உங்களை வழிநடத்திச் செல்லும். இன்றைய இளைஞர்களின் மீது அபார நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பிரமாண்ட  இறுதிப்போட்டி
அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு தொழில்நுட்ப ரீதியாக தீர்வு காணும் கண்டுபிடிப்புகளை உருவாக்க மாணவர்களை ஊக்கப்படுத்தும் திட்டமே ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான். மத்திய மனிதவள மேம்பாட்டு துறை சார்பில் 2017ல் நடத்தப்பட்ட முதலாவது ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டியில் 42,000 மாணவர்கள் பங்கேற்றனர். இது 2018ல் 1 லட்சம் பேராகவும், 2019ல் 2 லட்சமாகவும் அதிகரித்தது. 2020ம் ஆண்டில் அபரிமிதமாக 4.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதன் இறுதிச் சுற்று நேற்று தொடங்கி 3ம் தேதி வரை நடக்கிறது. இதில், மத்திய அரசின் 37 துறைகள், 17 மாநில அரசுகள் மற்றும் 20 தொழில் நிறுவனங்கள் கொடுத்துள்ள 243 பிரச்னைகளுக்கு மாணவர்கள் தீர்வு காண வேண்டும்.

கோவை மாணவர்களுக்கு பாராட்டு
ஹேக்கத்தான் நிகழ்ச்சியில் கோவை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதி மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது, கோவை பொறியியல் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்த மழை பொழிவை கண்டறியும் தொழில்நுட்பத்தை அவர் வெகுவாக புகழ்ந்தார். இந்த கண்டுபிடிப்பு வெற்றி அடையும் பட்சத்தில் விவசாயிகளுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்குமென அவர் நம்பிக்கை தெரிவித்தார். கோவை மாணவர்களுடன் பேசுகையில் பிரதமர் மோடி வணக்கம் என தமிழில் கூறி பேச்சை தொடங்கினார்.

பக்ரீத் வாழ்த்து
இஸ்லாமியர்களின் ஈகைத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பிரதமர் மோடி நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், `ஈத் முபாரக். ஈத் பண்டிகை தின வாழ்த்துகள். இந்த நாள் நல்லிணக்கத்தை உள்ளடக்கிய சமுதாயம் உருவாக ஊக்கம் அளிக்கட்டும். சகோதரத்துவம் மற்றும் இரக்கத்தை மென்மேலும் வளர செய்யட்டும்,’ என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Tags : Modi ,employers , New education policy, Prime Minister Modi, work
× RELATED பிரதமர் மோடியின் பேச்சுக்காக...