திருமலை: ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், தாடேபள்ளிக்கூடத்தில் புகைப்பட கலைஞராக தனது வாழ்க்கையை தொடங்கியவர் மாணிக்கயால ராவ். இவர், தாடேபள்ளிக்கூடத்தில் கடந்த 2014 ஆண்டு பாஜக சார்பில் முதல் முறையாக எம்எல்ஏ.வாக வெற்றி பெற்றார். 2014-2018 வரை சந்திரபாபு அமைச்சரவையில் இந்து அறநிலையத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார். கடந்த ஒரு மாதமாக கொரோனா தொற்று ஏற்பட்டு விஜயவாடா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். தனக்கு கொரோனா வந்தது குறித்து தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து, அதனை சமூக வலைத்தளங்களில் கடந்த ஜூலை 4ம் தேதி வெளியிட்டார்.
இதில், கொரோனா அறிகுறி உள்ளவர்கள் எந்தவித பயமின்றி பரிசோதனை செய்து, சிகிச்சை எடுத்து கொண்டால் விரைவில் குணம் அடையலாம். அதனை விட்டு கொரோனாவை மறைக்க முயன்றால் அதுவே உயிர் போகக்கூடிய நிலை ஏற்படும். எனவே, யாரும் பயப்பட வேண்டாம். மேலும், சமூக இடைவெளியை கடைபிடித்து, மாஸ்க் கட்டாயம் அணிந்து கொள்ள வேண்டும். தேவையின்றி வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். தனது நண்பரின் கார் டிரைவருக்கு கொரோனா ஏற்பட்டதால், நண்பருக்கும் அவர் மூலம் தனக்கும் தொற்று ஏற்பட்டதாக தெரிவித்திருந்தார்.