×

கொள்முதல் செய்யாததால் நெல்மணிகள் மழையில் முளைத்தது: திருவாரூரில் விவசாயிகள் கவலை

திருவாரூர்: திருவாரூர் அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்படாததால் மழையில் நெல் நனைந்து முளைத்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் 75 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. சுமார், 6 லட்சத்து 91 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது, முன்பட்ட குறுவை அறுவடை நடைபெற்று வரும் நிலையில் விவசாயிகள் தங்களது நெல்லை கொள்முதல் நிலையங்களுக்கு விற்பனைக்காக கொண்டு சென்று வருகின்றனர். வழக்கமாக நாளொன்றுக்கு 800 மூட்டைகளுக்கு பதில் ஆயிரம் மூட்டைகள் வரை நெல் கொள்முதல் செய்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இருப்பினும் ஒரே நேரத்தில் விவசாயிகள் அறுவடை செய்து வருவதன் காரணமாக அனைத்து நெல்களும் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரப்படுகிறது. அதன்படி திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா வடமட்டம், கீழவயலூர், பரவாக்கரை உட்பட பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் தங்களது நெல்லை கொள்முதலுக்காக அடுக்கி வைத்துள்ளனர். அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டும் கடந்த 10 நாட்களாக கொள்முதல் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன் பெய்த பலத்த மழை காரணமாக இந்த நெல் மூட்டைகள் அனைத்தும் முளைப்புத்திறன் ஏற்பட்டு அழுகும் நிலை இருந்து வருகிறது. எனவே நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து நுகர்பொருள் வாணிப கழகத்தின் துணை மேலாளர் ரெங்கநாதனிடம் கேட்டபோது, ‘ஒரேநேரத்தில் அறுவடை நடை பெற்றுள்ளதால் விவசாயிகளுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டாலும், அவர்கள் களத்திலிருந்து கொள்முதல் நிலையங்களில் கொண்டு வந்து அடுக்கி வருகின்றனர். எதிர்பாராமல் பெய்த மழையின் காரணமாக நெல் மூட்டைகள் நனையும் நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் உடனடியாக கொள்முதல் செய்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.



Tags : Thiruvarur , Nelmani, rain, Thiruvarur, farmers
× RELATED கோடை வெப்பத்தால் வற்றிப்போன நீர் நிலைகள் தண்ணீரை தேடும் பறவைகள்