சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் போலி மது குடித்ததால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது. போலி மதுபானம் விற்றது தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில், அமிர்தசரஸ், படாலா மற்றும் தரன் தரன் மாவட்டங்களில் கடந்த புதன் கிழமை முதல் போலி மதுபானம் குடித்த பலர் உயிரிழந்து வருகின்றனர். மது குடித்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று வரை 90 ஆக உயர்ந்துள்ளது. தரன் தரனில் 19 பேரும், அமிர்தசரசில் 11 பேரும், பாடாலாவல் 9 பேரும் நேற்று உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போலி மதுபானம் பல்வேறு பகுதிகளிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த இம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 3 மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் போலீசார் 40 இடங்களில் சோதனை நடத்தினார்கள். இதில், கள்ளச்சாராய வியாபாரிகள் 8 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக ஐஜி எஸ்பிஎஸ் பார்மர் தொலைபேசி வாயிலாக கூறுகையில், “ போலி மதுபானம் தொடர்பாக நேற்று மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் போலி மது விற்பவர்களை பிடிக்க, போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்,” என்றார்.