பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டையில் உள்ள கொரோனா வார்டில் தொற்றால் பாதிக்கப்பட்ட வாலிபரின் பிறந்தநாளையொட்டி கலெக்டர் கேட் கொடுத்து உற்சாகப்படுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. அதேபோல் தஞ்சை மாவட்டத்திலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகாவில் 300க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். பட்டுக்கோட்டையில் மட்டும் இதுவரை 170 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பட்டுக்கோட்டையை சேர்ந்த 21 வயதான வாலிபர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து பட்டுக்கோட்டை பெருமாள் கோயில் புதுரோட்டில் உள்ள புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கொரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று அவருக்கு பிறந்த நாளாகும். இந்த தகவல் தஞ்சை கலெக்டர் கோவிந்தராவுக்கு தெரியவந்தது. இதையடுத்து தஞ்சை கலெக்டர் கோவிந்தராவ் அனுமதியுடன், கொரோனா வார்டுக்குள் சக கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் சமூக இடைவெளி விட்டு, முககவசம் அணிந்து கேக் வெட்டி பிறந்தநாளை வாலிபர் கொண்டாடினார்.
இந்த நிகழ்ச்சியில் டாக்டர் நியூட்டன், செவிலிய கண்காணிப்பாளர் வசுமதி, உணவு குளோபல் சுப்பிரமணியன் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் பங்கேற்று பிறந்தநாள் கொண்டாடிய இளைஞருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறினர். அப்போது அனைவருக்கும் உற்சாகமாக வாலிபர் கேக் வழங்கினார். குறிப்பாக அந்த வாலிபருக்கு வழங்கப்பட்டிருந்த கேக்கில் ஹாப்பி பர்த்டே டூ என்று வாலிபரின் பெயர் எழுதப்பட்டு பை கலெக்டர் என்ற வாசகங்கள் இருந்தது. வாழ்த்துக்களை பெற்று கொண்ட அந்த இளைஞர், அனைவருக்கும் கேக் வழங்கினார்.
வாழ்நாளில் என்றும் மறக்க முடியாத நாள்
பிறந்தநாள் கொண்டாடிய வாலிபர் கூறுகையில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மன அழுத்தத்தை போக்கி உற்சாகமூட்டும் வகையில் அமைந்த இந்த பிறந்த நாள் என் வாழ்நாளில் என்றும் மறக்க முடியாத நாள். கொரோனாவை பார்த்து யாரும் பயப்பட தேவையில்லை. சுகாதாரமான முறையில் நல்ல உணவு முறைகளை கையாண்டு இந்த கொரோனாவை வெற்றி கொள்வோம் என்றார்.