×

தூத்துக்குடியில் காணாமல் போன மூன்று குழந்தைகளை 1 மணி நேரத்தில் போலீசார் மீட்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி வல்லநாடு அருகே காணாமல் போன குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் காட்டுப்பகுதியில் கண்டுபிடித்து மீட்ட போலீசாரை எஸ்பி பாராட்டியுள்ளார். சுப்பிரமணியன் மற்றும் சத்யா ஆகியோரின் பேத்தி மற்றும் பேரன்கள் இருவர் உட்பட மூன்று குழந்தைகளும் நேற்று பிற்பகல் 2 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்றவர்கள் மாலை 6 மணி ஆகியும் திரும்பி வரவில்லை. இதனால் அச்சமடைந்த அவர்களது தாத்தா மற்றும் பாட்டி மாலை 6 மணியளவில் முறப்பநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் மற்றும் முறப்பநாடு போலீசார் உடனடியாக குழந்தைகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். அருகில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்று விசாரணை நடத்தினர். அப்போது குழந்தைகள் வல்லநாடு காட்டுப்பகுதியில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காட்டுப் பகுதியில் தவித்துக் கொண்டிருந்த மூன்று குழந்தைகளையும் போலீசார் இரவு 7 மணியளவில் மீட்டனர். குழந்தைகளிடம் விசாரித்தபோது தங்களது தாயும், தந்தையும் குடும்பச்சண்டை காரணமாக வீட்டை விட்டுச் சென்றுவிட்டதாகவும், அதனால் தாத்தா, பாட்டியுடன் வசித்து வருவதாகவும், பெற்றோர்கள் இல்லாத மன வருத்தத்தில் வீட்டிலிருந்து வெளியேறி எங்காவது செல்வது என்று முடிவெடுத்துச் சென்றதாகவும் போலீசாரிடம் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குழந்தைகளுக்கு உணவு வாங்கிக் கொடுத்து, அறிவுரைகளை கூறி தாத்தா, பாட்டியிடம் ஒப்படைத்தார். புகார் வந்த ஒரு மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்டு குழந்தைகளை மீட்ட முறப்பநாடு காவல் ஆய்வாளர் பார்த்திபன், உதவி ஆய்வாளர்கள் சுரேஷ்குமார், ராஜா ராபர்ட் மற்றும் காவலர்களை எஸ்பி ஜெயக்குமார் பாராட்டினார்.



Tags : children ,Thoothukudi ,Tuticorin , Tuticorin, children, rescue
× RELATED தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று...