ஆம்பூர்: ஆம்பூரில் தனிமை முகாமில் இருந்து வெளியேறி சுற்றி திரியும் நபர்களால் அப்பகுதியினர் அச்சமடைந்துள்ளனர். ஆம்பூர் ஆனந்தா நகர் பகுதியில் தனியார் பள்ளி ஒன்றில் தற்போது கோவிட்-19 தனிமை முகாம் செயல்பட்டு வருகிறது. இந்த முகாமில் சுமார் 25க்கும் மேற்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இங்கு தங்க வைக்கப்பட்டவர்களுக்கு ஸ்வாப் டெஸ்ட் எடுக்கப்பட்டு முடிவுகளுக்கு தக்கவாறு சிகிச்சை ஏற்பாடு செய்யப்படுகிறது.
ஆனால், இங்கு தங்கி உள்ளவர்கள் தன்னிச்சையாக அந்தகட்டிடத்தில் இருந்து வெளியேறி சாலைகளில் சுற்றி திரிவதும், பள்ளி வளாகத்திற்கு முன்பு உள்ள சாலைகளில் அமர்ந்து இருப்பதுமாக உள்ளனர். இதனால், அவ்வழியாக செல்வோர் மற்றும் அப்பகுதியில் வசிப்போர் தொற்று பாதிப்பு ஏற்படும் என கருதி அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து சம்பந்தபட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கையாக உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.