×

முழு கல்விக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை: சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை: உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, முழு கல்விக் கட்டணத்தையும் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணங்களை வசூலிக்கக்கூடாது என்று தமிழக அரசு  கடந்த ஏப்ரல் 20ம் தேதி அரசாணை பிறப்பித்தது. அதேசமயம், ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரியும், அதற்கு தடை விதிக்கக் கோரியும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்புகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், நடப்பு கல்வி ஆண்டிற்கான கட்டணம் இன்னும் இறுதி செய்யப்படாததால், சென்ற ஆண்டு வசூலித்த கட்டணத்தின் அடிப்படையில், தமிழகம் முழுவதும் அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களும் 2020-21ம் ஆண்டுக்கான கல்வி கட்டணத்தில் 40 சதவீத தொகையை ஆகஸ்ட் 31க்குள் வசூலித்துக்கொள்ளலாம். மீதமுள்ள 35 சதவீத தொகையை பள்ளிகள் திறந்து 2 மாதங்களுக்குள் வசூலித்துக்கொள்ளலாம் என்று உத்தரவிட்டிருந்தார்.  இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, பள்ளிகள் முழு கல்வி கட்டணத்தையும் மாணவர்களிடம் இருந்து  வசூலிப்பதாக, தமிழக அரசு சார்பாக அரசு வக்கீல் அன்னலட்சுமி நேற்று  நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் முறையிட்டார்.

இதைக்கேட்ட நீதிபதி, எந்தெந்த பள்ளிகள் கட்டணம் வசூலிக்கிறது என்று ஆகஸ்ட் 17ம் தேதி  அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். பள்ளிகள் முழு கட்டணத்தை வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார். மேலும், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக முழுக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உத்தரவிட நேரிடும். அரசு இந்த விஷயத்தில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

* எந்தெந்த பள்ளிகள் கட்டணம் வசூலிக்கிறது என்று ஆகஸ்ட் 17ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
* உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக முழுக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உத்தரவிட நேரிடும்.
* இந்த விஷயத்தில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



Tags : schools ,Chennai High Court , Full tuition fees, schools, Chennai High Court
× RELATED பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்...