சென்னை: ஜெயலலிதாவின் போயஸ் கார்ட்ன் வீட்டின் 24 ஆயிரம் சதுர அடி நிலம், கட்டிடம், மரங்கள் உள்ளிட்டவற்றுக்கு இழப்பீடாக 68 கோடி ரூபாயை தமிழக அரசு நீதிமன்றத்தில் செலுத்தி, வீட்டை அரசுடமையாக்கியது. இதை எதிர்த்து ஜெயலலிதாவின் சகோதரர் மகளும், அவரது சட்டப்பூர்வ வாரிசுமான தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‘வருமான வரி பாக்கி 36 கோடி ரூபாயை அரசு இழப்பீடாக செலுத்திய தொகையை பெறுவதற்கு வருமான வரித் துறைக்கு தடை விதிக்க வேண்டும். வேதா நிலையம் இல்லத்தில் இருந்து அசையா சொத்துக்களை எடுக்க தடை விதிக்க வேண்டும்’ என கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை, பொதுப்பணித்துறை, சென்னை மாவட்ட வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் ஜெயலலிதா வீட்டை நேற்று ஆய்வு செய்தனர். வீட்டை நினைவிடமாக்கும்போது என்ன மாதிரியான ஏற்பாடுகளை செய்வது என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.