காத்மாண்டு: சீனா பேச்சை கேட்டு இந்தியாவை எதிர்த்த நேபாள பிரதமர் சர்மா ஒலியின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள நிலையில், அவரது சொந்த கட்சியிலேயே எதிர்ப்புகள் வலுத்துள்ளன. சீனாவுக்கு ஆதரவான எண்ணம் கொண்ட நேபாள பிரதமர் சர்மா ஒலி, லடாக் விவகாரத்தை தொடர்ந்து, இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கினார். தனது ஆட்சியை கவிழ்க்க இந்தியா சதி செய்வதாக குற்றம்சாட்டிய அவர், உத்தரகாண்ட்டின் 3 பகுதிகளை நேபாளத்துடன் இணைத்து சர்ச்சைக்குரிய புதிய வரைபடத்தை வெளியிட்டார். அதோடு, ‘ராமர் நேபாளி, அயோத்தி நேபாளத்தில் உள்ளது’ என்பது போன்ற கருத்துக்களால் இந்தியர்களை மன ரீதியாகவும் காயப்படுத்தினார்.
இதன் எதிரொலியாக அவரது பதவிக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது. பிரதமர் பதவியை பகிர்ந்து கொள்ளும் விவகாரத்தில் சர்மா ஒலி முரண்டு பிடிக்க, அவர் ராஜினாமா செய்ய வேண்டுமென ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியில் எதிர்ப்புகள் வலுத்துள்ளன. குறிப்பாக, இக்கட்சியில் ஒலிக்கு இணையான பலம் பெற்ற முன்னாள் பிரதமரான பிரசந்தா, இந்தியாவின் தீவிர ஆதரவாளர். இந்தியாவுக்கு எதிராக செயல்பட்ட ஒலியின் பதவியை பறிப்பதில் அவர் தீவிரமாக இருக்கிறார். இதனால், செய்வதறியாமல் ஒலி திண்டாடி வருகிறார். அவருக்கு சீனாதான் ஆறுதல் கூறி, தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் செய்தி தொடர்பாளரும், முன்னாள் துணை பிரதமருமான நாராயண்காஜி ஸ்ரேஸ்தா அளித்த பேட்டியில், ‘‘ஒலி 3 முக்கிய தவறுகளை செய்து விட்டார். இந்தியாவின் அடையாளமான சத்யமேவ ஜெயதே பற்றி தவறாக பேசி அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொண்டார், தனது கட்சியை கலைக்க சதி செய்வதாக ஆதாரமில்லாத குற்றச்சாட்டை கூறினார், ராமரின் பிறந்த இடத்தை பற்றி பொய் கூறினார்.
இது மூன்றுமே ஒலி செய்த மாபெரும் தவறுகள்,’’ என கூறி உள்ளார். ஏற்கனவே, கட்சியின் நிர்வாக தலைவர் புஷ்பா கமல் தாஹல் உள்ளிட்டோர் ஒலியின் இந்தியாவுக்கு எதிரான போக்கை கண்டித்துள்ள நிலையில், ஸ்ரேஸ்தாவும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனால், கட்சியிலும் அவருக்கு எதிர்ப்புகள் வலுத்துள்ளன.