×

ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்டு வர முழு அளவில் நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு உத்தரவாதம்

சென்னை: கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும்  தமிழர்கள் அத்தனை பேரையும் தாயகம் மீட்டுவருவதில் தீர்க்கமாக இருப்பதாக மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம்  அளித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்கள், சொந்த ஊர்களுக்கு திரும்ப ஏதுவாக தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில், விமானங்கள் தரையிறங்க அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி திமுக சார்பில் அதன் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதே கோரிக்கையுடன் ராஜா முகமது என்பவரும் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கடந்த முறை  விசாரணைக்கு வந்த  போது, மத்திய அரசு விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், வழக்கு  நீதிபதிகள்  சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன் அறிக்கை தாக்கல் செய்தார்.  அதில், கொரோனா  காரணமாக வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் அத்தனை தமிழர்களையும் தாயகம் மீட்டுவர உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டில் உள்ள தமிழர்களை மீட்டு வர ஜூன் 6ம் தேதி முதல் ஜூலை 20ம் தேதி வரை 101 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளது. கடந்த  20ம் தேதி முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை 58 விமானங்கள் இயக்கப்பட உள்ளது. இந்த வழக்கு தொடர்ந்த பின் மொத்தமாக 286 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 5ம் தேதி முதல் 31ம் தேதி வரை இந்தியாவுக்கு இயக்க உள்ள 792 விமானங்களில், தமிழகத்துக்கு 127 விமானங்கள் இயக்கப்பட உள்ளது என தெரிவித்தார்.

மத்திய அரசின் விளக்கத்தை பதிவு செய்த நீதிபதிகள், நீதிமன்றத்தில் உறுதியளித்தபடி, குறிப்பிட்ட கால அட்டவணையில் விமானங்கள் இயக்கப்படுவதை  உறுதி செய்ய வேண்டுமென அறிவுறுத்தினர். அப்போது திமுக சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் நீதிபதியிடம், கொரோனா ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டு வெளிநாட்டில் தவித்துவரும் தமிழர்களுக்கு அவர்களின் உணவு, மருத்துவ செலவு, பயணச்செலவு ஆகியவற்றை மத்திய அரசின் இந்திய சமூக நல நிதியிலிருந்து தருமாறு உத்தரவிட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதை கேட்ட நீதிபதிகள், இந்த கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். மேலும், மத்திய அரசு நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள விவரங்களின்படி விமானங்களை இயக்க தவறும் பட்சத்தில், இதே விவகாரத்தில்  நீதிமன்றத்தை மீண்டும்  அணுக  திமுகவிற்கு அனுமதி அளிக்கப்படுகிறது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags : High Court ,Tamils ,Central Government , Curfew, Foreigners, Tamils, High Court, Central Government
× RELATED தமிழர்களுக்கு எதிராக கருத்து...