×

இளைஞர்களை கெடுக்கும் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடைகோரி ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு: 4ம்தேதி விசாரணைக்கு வருகிறது

சென்னை: ஆன்லைன்  சூதாட்டத்திற்கு தடை விதிக்கக் கோரியும், அதுதொடர்பான  விளம்பரங்களில் நடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகை தமன்னா உள்ளிட்டோரை கைது செய்ய உத்தரவிடக்கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில்  வழக்கு தொடரப்பட்டுள்ளது.சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ஆன்லைன் சூதாட்டங்கள் சமூகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. ஆரம்பத்தில் பொழுதுபோக்குக்காக அதற்குள் செல்லும் இளைஞர்கள், அதற்கு அடிமையாகிவிடும் சூழல் ஏற்படுகிறது. கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகை தமன்னா போன்ற பிரபலங்களை வைத்து விளம்பரங்கள் மூலம் இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள்.

ஆன்லைன் சூதாட்டத்திற்காக, வட்டிக்கு பணம் வாங்கி பின்னர் அதை கட்டமுடியாத சூழல் ஏற்படும் போது,  இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலையும் ஏற்படுகிறது. ப்ளூவேல் விளையாட்டால்  மாணவர்கள்   தற்கொலைக்கு தூண்டப்பட்டதையடுத்து, உயர் நீதிமன்றம் அதற்கு தடை விதித்துள்ளது.   ஆன்லைன் சூதாட்டங்கள் அதை விட வீரியமானது என்பதால் இதில் உடனடியாக நீதிமன்றம் தலையிட்டு அதற்கு தடை விதிக்க வேண்டும். ஆன்லைன் சூதாட்ட   இணையதளங்களை முடக்க வேண்டும்.

ஆன்லைன் சூதாட்ட இணையதளங்களை நிர்வகித்து வருபவர்களை கைது செய்து சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதோடு, அத்தகைய ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்காக விளம்பரத்தில் நடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகை தமன்னா உள்ளிட்டோரையும் கைது செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென  நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வில் வழக்கறிஞர் சூரிய பிரகாசம் நேற்று ஆஜராகி முறையிட்டார். இதையடுத்து, மனுவை வரும் செவ்வாய்க்கிழமை  (4ம் தேதி) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.



Tags : trial , Youth, Online Gambling, Welfare Case, Investigation
× RELATED பாரத் பயோடெக் நிறுவனம் தகவல் இந்தியாவில் காசநோய் தடுப்பூசி பரிசோதனை