×

ஆகஸ்ட் முதல் வாரம் முழுவதும் எலும்பு மூட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி

காஞ்சிபுரம்:தமிழகம் முழுவதும் வரக்கூடிய ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில், எலும்பு மூட்டு வாரமாக கொண்டாட முடிவு செய்துள்ளதாக, தமிழ்நாடு எலும்பு மூட்டு மருத்துவர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். தமிழ்நாடு எலும்பு மூட்டு மருத்துவர்கள் சங்க தலைவர் எஸ்.ஜி.திருமலைச்சாமி,செயலாளர் பி.டி.சரவணன் ஆகியோர் கூறியதாவது. கடந்த 2012ம் ஆண்டு முதல் ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி எலும்பு மூட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, வரும் ஆகஸ்ட் முதல் வாரம் முழுவதும் எலும்பு மூட்டு வாரமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிதைவு நோய் குறைபாடு ஏற்படுவதை தவிர்ப்பது குறித்த கருப்பொருளை மையமாக வைத்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாநிலம் முழுவதும் நடத்தவுள்ளோம். சிதைவு நோய் வலியை மட்டுமின்றி சிதைவையும் ஏற்படுத்துகிறது. முழங்கால், கணுக்கால், முதுகெலும்பு ஆகிய முக்கிய மூட்டுக்களில் ஏற்படுகிறது. இதற்கு உடல் எடையை முழுமையாக பராமரிப்பது, உடற்பயிற்சி செய்வது, வைட்டமின் மற்றும் கால்சியம் நிறைந்த சத்தான உணவுகளை எடுத்து கொள்வது, தசையின் வலிமையை மேம்படுத்துவது, மூட்டுக்களையும், முதுகெலும்பையும் அதிகமாக பயன்படுத்துவதை தவிர்த்தல், தேவையான மருத்துவ ஆலோசனைகள் பெறுதல் ஆகியவை மூலம் சிதைவு நோயை தடுக்க முடியும்.

இதுகுறித்து விழிப்புணர்வு பதாகைகளை சுவரொட்டிகளாக காட்சி படுத்துவது, வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது, எளிமையான யோகா பயிற்சிகளை கற்றுத் தருதல் என பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த முடிவு செய்துள்ளோம் என்றார்.

Tags : August, Arthritis Awareness
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...