×

இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேஸ்புக், யூடியூப், டிவிட்டரில் வீடியோ வெளியிட தடைகோரி வழக்கு: மத்திய, மாநில அரசு பதில்தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை:  கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் கந்தசஷ்டி கவசம் குறித்த கொச்சை விமர்சனங்கள் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கருப்பர் கூட்டம் சேனலை நிர்வகித்து வந்த சுரேந்திரன், செந்தில்வாசன் உள்ளிட்டோர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில், யூடியூப், பேஸ்புக், டிவிட்டர் நிறுவனங்கள் மீதும், கருப்பர் கூட்டம் சுரேந்திரன் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, சென்னை அண்ணாநகரை சேர்ந்த வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.

அதில், கொரோனா பேரிடரால் ஏற்கனவே உலகமே தத்தளித்து வரும்  சூழலில், தற்போது யூடியூப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வெறுப்பு பிரசாரம் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அரசியல் தலைவர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள் தொடங்கி கடவுள்கள் வரை அவமதிக்கப்படுகின்றனர். தனிநபர்கள் சிலர், தங்களுடைய பேச்சுக்கள் மற்றும் கட்டுரைகளால் மதநல்லிணக்கத்தை சீர்குலைத்து வருகின்றனர்.  வன்முறையை தூண்டும் ஆபாச உள்ளடக்கங்கள்  அடங்கிய செய்திகளை சமூக வலைத்தளங்களில்  பதிவிடக் கூடாது என சமூக வலைதளங்கள் விதிகள் வகுத்துள்ள போதும், இதுபோன்ற வீடியோக்கள் தொடர்ந்து பதிவிடப்படுகின்றன. அவற்றை நீக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை.

கடந்த 2018ல் சமூக வலைதளங்களை கண்காணிக்க மாநில சைபர் கிரைம் போலீசாரை வலுப்படுத்த மத்திய அரசு விதிகளை வகுத்துள்ளது. அந்த விதிகளை பின்பற்றி இருந்தால், இது போன்ற சட்டவிரோத நிகழ்வுகள் தடுக்கப்பட்டிருக்கும். எனவே, கந்த சஷ்டி கவசம் தொடங்கி மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் இதுபோன்ற வீடியோக்களை வெளியிட யூடியூப், பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
 இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வு, மூன்று வாரங்களில் பதிலளிக்கும்படி, மத்திய-மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.

Tags : state government ,Central ,state govt , Hindu sentiments, Central, State Government, High Court
× RELATED நீட் தேர்வை மாநில அரசுகளின்...