திருவனந்தபுரம்: கேரள தங்கக்கடத்தலை வெளிக்கொண்டு வந்த சுங்கத்துறை அதிகாரி பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. கேரள அரசியலில் புயலை கிளப்பிய தங்கக்கடத்தல் விவகாரத்தை வெளிக்கொண்டு வந்த சுங்கத்துறை அதிகாரி அனிஸ் பி.ராஜன் திடீர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவனந்தபுரம் விமான நிலைய சுங்கத்துறையின் துணை ஆணையராக இருந்த அவர், தற்போது நாக்பூருக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து, இது வழக்கமான பணியிடமாற்றம் தான் என்று சுங்கத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பணியிடமாற்ற விவகாரம் தற்போது அரசியல் வட்டாரத்தில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் சட்டவிரோதமாக 30 கிலோ தங்கம் கடத்தப்பட்டது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக தூதரகத்தில் பணியாற்றி வந்த சரித், முன்னாள் ஊழியரான ஸ்வப்னா சுரேஷ், அவரின் கூட்டாளி சந்திப் நாயர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கில் முதல்வரின் முதன்மை செயலர் மற்றும் தகவல் தொழில்நுட்ப செயலராக இருந்த சிவசங்கருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து, அவர் இந்த பதவிகளில் இருந்து நீக்கப்பட்டார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.