கூடுவாஞ்சேரி: தாம்பரத்தில் இருந்து நேற்று ஒரு லாரி, செங்கல்பட்டு நோக்கி
செங்கல் ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில்
சென்றபோது, நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே திடீரென லாரி
தறிக்கெட்டு ஓடி, சாலையில் இருந்த சென்டர் மீடியனில் மோதி தலைகுப்புற
கவிழ்ந்தது. இதனால், செங்கற்கள் சாலை முழுவதும் சரிந்து விழுந்தன. இதை
கண்டதும் அப்பகுதி மக்கள் ஓடி வந்து, லாரியின் இடிபாடுகளில் சிக்கிய
டிரைவர், கிளீனரை மீட்டு, அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அந்த
நேரத்தில், செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி சமூக நலத்துறை
அமைச்சர் சரோஜா சென்று கொண்டிருந்தார். இந்த சம்பவத்தை பார்த்த அவர்,
உடனடியாக, மருத்துவமனைக்கு சென்று படுகாயத்துடன் சிகிச்சை பெற்ற டிரைவர்,
கிளீனரிடம் நலம் விசாரித்து ஆறுதல் கூறினர். பின்னர், இருவரையும் மேல்
சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
தகவலறிந்து கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் சம்பவ
இடத்துக்கு சென்று, சாலையில் கவிழ்ந்து கிடந்த லாரியை அப்புறப்படுத்தி,
போக்குவரத்தை சரி செய்தனர்.