விருத்தாசலம்: விருத்தாசலம் ரயில் நிலையம் அருகே அதிக பாரம் காரணமாக கழற்றி விடப்பட்ட 28 பெட்டிகள் இன்ஜின் இல்லாமல் தனியாக நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இருந்து சேலத்திற்கு நேற்று காலை 7:30 மணியளவில், 60 பெட்டிகளில் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏற்றிக்கொண்டு சரக்கு ரயில் ஒன்று புறப்பட்டுச் சென்றது. 5 கி.மீ., துாரம் சென்ற சரக்கு ரயில், விருத்தாசலம் அடுத்த சின்னவடவாடி அருகே சென்றபோது திடீரென ரயில் நிறுத்தப்பட்டது. அதிக பாரம் காரணமாக 28 பெட்டிகளை, ரயில்வே அதிகாரிகள் அங்கேயே நிறுத்திவிட்டு மீதமுள்ள 32 பெட்டிகளுடன் சேலத்திற்கு ரயில் புறப்பட்டுச் சென்றது.
ஆறரை மணி நேரம் ரயில் தண்டவாளத்தில் இன்ஜின் இல்லாமல், சரக்கு பெட்டிகள் நின்றது. பகல் 2 மணியளவில் சேலத்திற்கு சென்ற ரயில் இன்ஜின் மீண்டும் வந்து, கழட்டி விடப்பட்ட ரயில் பெட்டிகளை சேலத்திற்கு இழுத்துச் சென்றது. ரயில் இன்ஜின் இல்லாமல், அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுடன் சரக்கு பெட்டிகள் நின்றதால், அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.