டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தியின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி இன்று மாநிலங்களவை காங்கிரஸ் எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது விரைவில் நாடாளுமன்றம் கூடுவது உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறுப்படுகிறது. காணொலி காட்சி மூலம் நடைபெறும் ஆலோசனையில் ராகுல்காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் ப.சிதம்பரம், மல்லிகார்ஜீன கார்கே, கே.சி.வேணுகோபால், ஏ.கே.ஆண்டனி உள்பட 40 எம்.பி.க்கள் பங்கேற்றனர்.
முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் சோனியா அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போதும் வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காகவே சோனியா காந்தி மருத்துவமனைக்கு வந்ததாக விளக்கம் அளிக்கப்பட்டது.
சோனியா காந்தி, கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அடிக்கடி வெளிநாடு சென்று அவர் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் இரவு 7 மணி அளவில் அனுமதிக்கப்பட்டுள்ள சோனியா காந்தி வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை சேர்மன் டாக்டர் டி.எஸ்.ராணா தெரிவித்துள்ளார்.