ஒரத்தநாடு: ஒரத்தநாடு அருகே விபத்தில் சிக்கி மயங்கியவரிடம் இருந்த ரூ4.20 லட்சத்தை அவரது தந்தையிடம் ஒப்படைத்த ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அலெக்சாண்டர்(37). இவர் இன்று அதிகாலை 5 மணியளவில் ஒரத்தநாட்டுக்கு பைக்கில் சென்றார். பாப்பாநாட்டில் தனியார் பள்ளி அருகில் சாலையில் காய வைப்பதற்காக உளுந்தை நேற்று இரவே கொட்டி குவியலாக வைத்திருந்தனர். இருட்டில் அந்த குவியல் தெரியாததால், அலெக்சாண்டர் அதில் மோதி கீழே விழுந்து மயக்கமடைந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் வந்து அலெக்சாண்டரை ஆம்புலன்சில் ஏற்றினர். அப்போது அலெக்சாண்டரிடம் ரூ.4 லட்சத்து 20 ஆயிரத்து 309 ரொக்கம் இருந்தது. ஆம்புலன்ஸ் டிரைவர் செக்கூரை சேர்ந்த கர்ணன்(30), டெக்னீஷியன் கருக்காக்கோட்டை தவக்குமார்(32) ஆகியோர் அலெக்சாண்டரை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் அலெக்சாண்டரின் தந்தை செல்வராஜை தொடர்பு கொண்டு இதுபற்றி தெரிவித்தனர். மருத்துவமனைக்கு விரைந்து வந்த அவரிடம் ரொக்க பணத்தையும் ஒப்படைத்தனர்.
அலெக்சாண்டர் பல பணிகளுக்கு காண்ட்ராக்ட் அடிப்படையில் ேவலையாட்கள் அனுப்பும் பணி செய்து வந்தார். இவ்வாறு அனுப்பிய பணியாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக இந்த பணத்தை அவர் எடுத்துச்சென்றதாக கூறப்படுகிறது. ஆம்புலன்ஸ் டிரைவர் கர்ணன், டெக்னீஷியன் தவக்குமார் ஆகியோரின் நேர்மையை அனைவரும் பாராட்டினர்.