×

தஞ்சை ஜிஹெச்சில் பரபரப்பு; முதியவர் வயிற்றில் போடப்பட்ட தையல் பிரிந்து குடல் வெளியே வந்தது: டிஸ்சார்ஜ் ஆன சில மணி நேரத்தில் சம்பவம்

தஞ்சை: தஞ்சை ஜிஹெச்சில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சில மணி நேரத்தில் முதியவர் வயிற்றில் போடப்பட்ட தையல் பிரிந்து குடல் வெளியே வந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தொண்டராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி (75). திமுக கிளை செயலாளரான இவர், கூட்டுறவு சங்கத்தில் எழுத்தராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். வீராசாமிக்கு குடலில் புண் இருந்ததால் அவருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டது. இதனால் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 22ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

மறுநாள் குடலில் புண் ஏற்பட்ட அழுகிய பகுதியை அகற்றிவிட்டு டாக்டர்கள் தையல் போட்டனர். நேற்று காலை வீராசாமி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். வீட்டுக்கு சென்ற சில மணி நேரத்தில் வயிற்றில் போடப்பட்டிருந்த தையல் பிரிந்து குடல் வெளியே வந்தது. இதனால் வலியால் துடித்த வீராசாமியை பார்த்து அவரது குடும்பத்தினர் அலறினர். இதையடுத்து மீண்டும் அவசர அவசரமாக ஆட்டோவில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வீராசாமியை உறவினர்கள் அழைத்து சென்றனர். அங்கு வீராசாமிக்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்வதற்கான நடவடிக்கையில் டாக்டர்கள் ஈடுபட்டனர்.

இதுகுறித்து உறவினர்கள் கூறுகையில், ‘‘மருத்துவர்களின் கவனக்குறைவால்தான் வீராசாமிக்கு போடப்பட்டிருந்த தையல் பிரிந்து குடல் வெளியில் வந்தது. இதனால் சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : incident ,stitches , Tanjay GH, Elder
× RELATED 3 பேர் கொலைக்கு பழிக்குப்பழியாக தலை,...