சென்னை: 2 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள் மற்றும் புத்தகப்பை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்க பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். ஒரு மணி நேரத்திற்கு 20 மாணவர்கள் என கால அட்டவணையில் பாடநூல், புத்தப்பை வழங்க வேண்டும். மாணவர்கள் அதிகம் உள்ள பள்ளிகளில் 2 அல்லது 3 கவுன்ட்டர்களில் பாடநூல்கள், புத்தகப்பை தர வேண்டும். சமூக இடைவெளி உள்ளிட்ட விதிகளை பின்பற்றி ஆகஸ்ட் 3 முதல் பாடநூல்கள், புத்தகப்பை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இணையவழி வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. முழுமையான இணையவழி, பகுதியளவு இணையவழி, ஆஃப் லைன் மோடு முறைகளில் வகுப்பு நடத்தலாம். தொலைக்காட்சி மூலம் பாடங்களை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்பு குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தக் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. 1 - 8 ஆம் வகுப்பு வரை 1.30 மணி நேரம், 9 - 12ஆம் வகுப்பு 3 மணி நேரம் மட்டுமே வகுப்பு நடத்தலாம். ஒவ்வொரு வகுப்புகளுக்கான நேரம் 30 முதல் 45 நிமிடங்கள் தான் இருக்க வேண்டும். ஒவ்வொரு ஆசிரியரும் நாள் ஒன்றுக்கு 6 வகுப்புகள் மட்டுமே நடத்த வேண்டும். ஒவ்வொரு வகுப்புக்கும் இடையே 10 முதல் 15 நிமிடங்கள் இடைவேளை இருக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.