திருமங்கலம்: சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கோரி திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ள வடமாநில தொழிலாளர்கள் சாப்பிட்ட மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அரசு ஹோமியோபதி மருத்துவ கல்லூரி உள்ளது. கொரோனா பரவலை தொடர்ந்து இந்த மருத்துவ கல்லூாரி கண்காணிப்பு மையமாக மாற்றப்பட்டுள்ளது. வடமாநிலத்தவர் மற்றும் வெளிமாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து வருவோர் இந்த மையத்தில் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு தொற்று இல்லை எனில் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த 20 தினங்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த உத்திரபிரதேசத்தை சேர்ந்த 5 தொழிலாளர்கள் நடந்தே தங்களது மாநிலத்திற்கு சென்றனர். மதுரை மாவட்டம் கப்பலூர் டோல்கேட் சோதனைச்சாவடியில் இவர்களை பிடித்து வருவாய் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மையத்தில் தங்க வைத்தனர். 14 நாள்கள் முடிந்த நிலையில், பரிசோதனையில் இவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது. இருப்பினும் உத்திரபிரதேச மாநிலத்திற்கு செல்ல ரயில்கள் எதுவும் இல்லாததால் தொடர்ந்து இவர்கள் இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
14 நாள் தனிமைப்படுத்தல் முடிந்தும் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்காததால் சாப்பிட மறுத்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மறவன்குளம் விஏஓ அன்ழகன் மற்றும் போலீசார் நேற்று இரவு பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர். இன்று திருமங்கலம் ஆர்டிஓ பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.