காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ஆடிவெள்ளியை முன்னிட்டு பொருட்களை வாங்க கடைகளில் மக்கள் அலைமோதுகிறது. இதனால் துணிக்கடைகளை மூட மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தற்போது சமூக இடைவெளியின்றி மக்கள் கூடுவதால் மேலும் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆடிவெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு புடவை எடுத்து வழிபடுவது வழக்கம். அதன் அடிப்படையில், காஞ்சிபுரம் மாவட்டம் காந்தி சாலையில் உள்ள துணி கடைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். இதனைத்தொடர்ந்து, ஒரே இடத்தில் அதிகளவு மக்கள் குவிந்ததால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தற்போது, காஞ்சிபுரத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மக்கள் கூட்டத்தை கண்டு அதிர்ச்சியடைந்த மாநகராட்சி நிர்வாகம் துணிக்கடைகளை மூட உத்தரவிட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் உள்ள கோவில்களை திறக்க அனுமதி இல்லாத நிலையில், வீடுகளில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்த இருப்பதால், மக்கள் அதிகளவு கூடியதாக மாநகராட்சி நிர்வாகம் கூறியுள்ளது.