×

நேரடி கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யாததால் மழையில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள்

தா.பழூர்: தா.பழூர் அருகே உள்ள கோடாலிகருப்பூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் உரிய நேரத்தில் கொள்முதல் செய்யாததால் நெல்கள் மழையில் நனைந்து முளைத்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். அரசு உடனடியாக நெல்லை கொள்முதல் செய்து, முளைத்த நெல்களுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தின் டெல்டா பகுதியாக உள்ள தா.பழூர் ஒன்றியத்தில் கோடாலிகருப்பூர், அண்ணகாரன்ப்பேட்டை, சோழமாதேவி, குறிச்சி, இடங்கண்ணி, வாழைக்குறிச்சி, கண்டியங்கொல்லை, கோடாலி, வடவாறு தலைப்பு, தென்கச்சி பெருமாள்நத்தம், கீழக்குடிகாடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்வதற்காக கோடாலிகருப்பூர் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடமிருந்து நெல்லை முழுமையாக கொள்முதல் செய்யாத காரணத்தால் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்த நெல்லை சாலைகள் மற்றும் திறந்தவெளியில் கொட்டி விவசாயிகள் பாதுகாத்து வருகின்றனர். இந்த நெல்லை சாதாரண தார்பாய் போட்டு மூடி உள்ளதால் சாலையில் செல்லக்கூடிய கால்நடைகள் மற்றும் பன்றிகள் நெல்லை சேதப்படுத்துகின்றன. மேலும் கொள்முதல் செய்யப்பட்டு மூட்டைகளாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல்லை ஏற்றிக் கொண்டு செல்லாமல் அதுவும் தேக்கமடைந்துள்ளது.

மேலும் சாக்குகளும் பற்றாக்குறையாக உள்ளதால் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்து மூட்டையாக அடுக்கி வைப்பதற்கு இடமோ, தேவையான சாக்குபைகளோ இல்லாததால் 15 நாட்களுக்கும் மேலாக நெல்லை சாலையிலேயே கொட்டி வைத்துள்ளனர். இதனால் விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருவதால் சாலையில் கொட்டி உள்ள நெல்கள் மட்டுமல்லாமல் மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல்களும் நனைந்து தற்போது முளைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால்அறுவடை செய்யப்பட்ட நெல்லை நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்வதிலும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, அதிக அளவில் செலவு செய்து நெல் சாகுபடி செய்து விற்பனைக்கு கொண்டு வந்தால் பாதுகாப்பான இடவசதியோ, தேவையான அளவிற்கு சாக்குகளோ இல்லாததால் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்ய அதிகாரிகள் மறுத்து வருகின்றனர். எனவே நெல்லை சாலையில் கொட்டி நாட்கணக்கில் இரவு, பகல் பாராமல் பாதுகாக்க வேண்டிய சூழ்நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளோம். இதனால் எடை குறைவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் கால் பங்குக்கு மேல் நெல்லும் மழையில் சேதமாகி முளைத்து விட்டது. எனவே தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை முழுமையாக கொள்முதல் செய்ய உரிய உத்தரவை வழங்க வேண்டும். மேலும் மழையில் சேதமடைந்த நெல்லுக்கு உரிய இழப்பீடும் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : purchase station , Paddy bundles, Kodalikaruppur
× RELATED கால்நடை வளர்ப்பு தொழில் அதிகமுள்ள...