×

கேரள தங்கக்கடத்தல் வழக்கு!: சிவசங்கர் தொடர்பு குறித்து 10 நாளில் முடிவு எடுக்க வேண்டும்.. என்.ஐ.ஏ., சுங்கத்துறைக்கு உள்துறை கெடு..!!

டெல்லி: கேரள தங்கக்கடத்தல் வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கர் தொடர்பு குறித்து 10 நாட்களில் உரிய முடிவு எடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கெடு விதித்துள்ளது. சிவசங்கரனிடம் விசாரணை நடத்திவரும் தேசிய புலனாய்வு முகமை மற்றும் சுங்கத்துறைக்கு இதுதொடர்பான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது. இரு அமைப்புகளும் சிவசங்கரனிடம் தனித்தனியாக 4 முறை விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது தங்கக்கடத்தல் ராணி ஸ்வப்னா உடனான தொடர்பு குறித்து அதிகாரிகள் கேட்டறிந்துள்ளனர்.

அதற்கு பதிலளித்துள்ள சிவசங்கர், தமது உறவினரின் மனைவி என்ற முறையில் மட்டுமே ஸ்வப்னாவை தெரியும். அவருடன் வேறு எந்த தொடர்பும் கிடையாது என மறுத்துள்ளார். சிவசங்கர் இன்னும் விசாரணை வளையத்திற்குள் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கேரள அரசின் உயர் பதவியில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரை அதிக நாட்கள் சந்தேகத்தின் கீழ் வைத்திருக்கக்கூடாது. அவர் விஷயத்தில் 10 நாட்களில் ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் திட்டவட்டமாக கூறியுள்ளது. இதையடுத்து கேரள தலைமை செயலகத்தில் சிவசங்கர் அறையில் உள்ள சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்வதில் என்.ஐ.ஏ. தீவிரம் காட்டி வருகிறது.

கேரள முதல்வரின் முதன்மை செயலாளர் மற்றும் ஐ.டி. துறை செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள சிவசங்கர், ஸ்வப்னா கும்பலுடன் ஏற்பட்ட தொடர்பு புகாரில் சஸ்பெண்ட் ஆகியுள்ளார். இதற்கிடையே வெளிநாட்டில் இருந்து தூதரகம் பெயரில் கடத்திவரப்பட்ட தங்கக்கட்டிகளை ஸ்வப்னா கூட்டாளிகள் தமிழகம் மற்றும் மகாராஷ்டிராவில் விற்பனை செய்ததாக கைதான ஸ்வப்னா கூட்டாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர். அதன்பேரில் திருச்சியை சேர்ந்த 6 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து சென்றதாக தகவல் வெளியானது. அதனை திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் மறுத்துள்ளார்.

Tags : Kerala , Kerala gold smuggling case!
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...