குளித்தலை: தமிழகத்தில் கொரோனோ பரவுவதை தடுக்கும் வகையில் இந்துசமய அறநிலையத்துறை கோயில்கள் அனைத்தும் காலவரையறையின்றி மூடப்பட்டது. இதனால் அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த அய்யர் மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலுக்கு சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஆயிரத்தி 27 படி உயரம் கொண்ட ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் மலையேறி தரிசனம் செய்து வருவது வழக்கம்.
அப்போது நூற்றுக்கணக்கான குரங்குகள் அடிவாரத்திலிருந்து மலை உச்சி செல்லும் வரை சுற்றித்திரியும். இந்த குரங்குகளுக்கு பக்தர்கள் பொதுமக்கள் படியேறிச் செல்லும் பொழுது குரங்குகளுக்கு உணவாக தாங்கள் வைத்திருக்கும் வாழைப்பழங்கள் கடலைப் பொரி ஆகியவைகளை வழங்குவர். இதனால் அனைத்து குரங்குகளும் அய்யர்மலை விட்டு வெளியேறாமல் அங்கேயே சுற்றி திரிந்து வந்தது. இந்நிலையில் மார்ச் மாதத்திலிருந்து தமிழக அரசு ஊரடங்கு உத்தரவால் கோயில்களில் பக்தர்கள் வர தடை செய்ய உத்தரவிட்டிருந்தது. இதனால் கடந்த 4 மாதங்களாக கோயிலுக்கு பக்தர்கள் வராததால் இடைப்பட்ட காலத்தில் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் மலை அடிவாரத்தில் ஒரு பகுதியில் பழம் மற்றும் பொரிகடலை ஆகியவற்றை குரங்குகளுக்கு வழங்கி வந்தனர். சிறிது நாட்களுக்கு இந்த உணவு குரங்குகளுக்கு கிடைத்தது.
தொடர்ந்து கிடைக்காததால் அய்யர் மலையை விட்டு அனைத்து குரங்குகளும் உணவுக்காக சத்தியமங்கலம் மயிலாடி தெற்குமயிலாடி, வை புதூர், கோட்டைமேடு, புதுப்பாளையம் ஆகிய பகுதிகளில் சாலையோரம் பயிரிட்டுள்ள வாழைகளில் உள்ள இலைகள், வாழைதார்களை குரங்குகள் நாசப்படுத்தி வருகின்றன. விவசாயிகள் ஏற்கனவே ெகாரோனா பாதிப்பால் வாழைத்தாருக்கு உரிய விலை கிடைக்காமல் நஷ்டத்திற்கு விற்கும் நிலையில் மிகுந்த வேதனை அடைந்து வருகின்றனர்.
மேலும் இது குறித்து இந்து அறநிலைத்துறை அதிகாரிகளும் வனத்துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்து அய்யர் மலையில் இருந்த குரங்குகள் சரியான உணவின்றி கிராமப் பகுதிகளுக்கு சென்று விளை நிலங்களை நாசப்படுத்துவதால் அதனை தடுக்கும் வகையில் குரங்குகளையும் பாதுகாப்பாக பிடித்து தேவையான உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.