×

சென்னையில் 9 மண்டலங்களில் நோய் கட்டுப்பாடு பகுதிகள் இல்லை: மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னையில் 9 மண்டலங்களில் நோய் கட்டுப்பாடு பகுதிகள் இல்லை என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பை குறைக்க மாநகராட்சி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியது. இதன்படி சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. தற்போது சென்னையில் தினசரி ஆயிரம் பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் நோய் கட்டுப்பாடு பகுதிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

சென்னையில் ஒரு தெருவில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், அந்த தெரு முழுவதையும் கட்டுப்பாடு மண்டலமாக அறிவிக்கும் திட்டத்தை மாநகராட்சி செயல்படுத்தி வந்தது. இந்நிலையில், சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரிக்கவே ஒரு தெருவில் 5 பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் மட்டுமே அந்த பகுதி கட்டுப்பாடு பகுதியாக தற்போது அறிவிக்கப்படுகிறது. இதனால், சென்னையில் நாளுக்கு நாள் கட்டுப்பாடு பகுதிகளின் எண்ணிக்கை குறைந்து வந்தது. 200க்கும் மேல் இருந்த கட்டுப்பாடு பகுதிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து தற்போது 57 கட்டுப்பாடு பகுதிகள் மட்டும் உள்ளன.  

ஆனால், இந்த 57 பகுதிகளும் 6 மண்டலங்களிலே உள்ளது. சென்னையில் உள்ள 9 மண்டலங்களில் கட்டுப்பாட்டு பகுதிகளே இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது. இதில் அதிகபட்சமாக அண்ணா நகரில் 18, கோடம்பாக்கத்தில் 18, அம்பத்தூரில் 16, தேனாம்பேட்டையில் 3, வளசரவாக்கம் மற்றும் திரு.வி.க.நகர் மண்டலத்தில் தலா ஒரு கட்டுப்பாட்டு பகுதிகளும் உள்ளன. திருவொற்றியூர், மணலி, மாதவரம், ராயபுரம், தண்டையார்பேட்டை, அம்பத்தூர், அடையாறு, ஆலந்தூர், சோழிங்கநல்லூர், பெருங்குடி ஆகிய மண்டலங்களில் ஒரு கட்டுப்பாட்டு பகுதிகள் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : zones ,Chennai: Corporation ,Chennai , Chennai, 9 Zones, No Disease Control Areas, Corporation Information
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...