சென்னை: புரசைவாக்கம் பெரம்பூர் பேரிக்ஸ் சாலையை சேர்ந்தவர் சந்தீப் ஜெயின் (32). இவர் பெரியமேடு சைடாம்ஸ் சாலை அப்பாசாமி கார்டன் என்ற இடத்தில் தங்க நகைகள் தயாரிக்கும் பட்டறை நடத்தி வருகிறார். நகை பட்டறையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வடமாநிலத்தை சேர்ந்த சையதுல் இஸ்லாம் மற்றும் ரஹியுல் சர்தார் ஆகியோர் தங்கி நகைகளை செய்து வந்தனர். இந்நிலையில், கடந்த 24ம் தேதி இருவரிடமும் நகைப்பட்டறை உரிமையாளர் சந்தீப் ஜெயின் 222 கிராம் தங்க கட்டியை ஆதாவது 35 சவரன் தங்கத்தை கொடுத்து நகைகளாக செய்ய சொல்லியிருந்தார். ஆனால் அவர்கள் வாங்கி தங்க கட்டியை நகை பெட்டியில் வைக்கவில்லை. உடனே சந்தேகமடைந்து உரிமையாளர் அவர்கள் தங்கி இருந்த அறைக்கு சென்று பார்த்த போது இருவரும் மாயமாகி இருந்தனர். அவர்களின் செல்போனிலும் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து நகை பட்டறை உரிமையாளர் சந்தீப் ஜெயின் கொடுத்த புகாரின் பேரில் பெரியமேடு போலீசார் வடமாநில தொழிலாளர்களை தேடி வருகின்றனர்.