×

ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம் வாலிபர் ஓடஓட விரட்டி வெட்டி கொலை: மர்மநபர்கள் வெறிச்செயல்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே நேற்று அதிகாலை 3 பேர் கொண்ட மர்ம கும்பலால் ரவுடியின் கூட்டாளி வெட்டி கொலை செய்யப்பட்டார். ஸ்ரீபெரும்புதூர் அருகே படப்பை அடுத்த ஆத்தனஞ்சேரி கிராமம் எம்ஜிஆர் தெருவை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் அஜய்பிரசாத் (20). படப்பை அருகே சாலமங்களத்தில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை சுமார் 6 மணியளவில், அஜய்பிரசாத் தனது பைக்கில் வேலைக்கு புறப்பட்டார். வண்டலூர் - வாலாஜாபாத் சாலை, ஆரம்பாக்கம் கூட்டு சாலை அருகே சென்றபோது, எதிர் திசையில், ஒரே பைக்கில் வந்த 3 பேர், அஜய்பிரசாத்தை வழிமறித்தனர். பின்னர், திடீரென அவர்கள், மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாளை எடுத்து, அவரை தாக்க முயன்றனர்.

இதை கண்டஅஜய்பிரசாத், பைக்கை போட்டுவிட்டு ஓடினார். மர்மநபர்கள் அவரை ஓட ஓட விரட்டி கையில் வெட்டினர். ஆனாலும், அவர்களிடம் சிக்காத அஜய்பிரசாத், அருகிலிருந்த ஓட்டலுக்குள் புகுந்தார். அவரை விரட்டி சென்ற மர்மநபர்கள், ஓட்டலுக்குள் நுழைந்து, அஜய்பிரசாத்தின் தலை, கழுத்து உள்பட உடல் முழுவதும் சரமாரியாக வெட்டினர். இதில் அஜய்பிரசாத் சம்பவ இடத்திலேயே, துடிதுடித்து இறந்தார். பின்னர், மர்மநபர்கள் அங்கிருந்து பைக்கில் தப்பினர்.தகவலறிந்து மணிமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அதில், கடந்த ஓராண்டுக்கு முன் கரசங்காலை சேர்ந்த பிரபல ரவுடியான அருண் (எ) எம்பா அருணின் கூட்டாளியாக அஜய்பிரசாத் இருந்தார். அப்போது கொலை முயற்சி, பணம் கேட்டு மிரட்டல், வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் தொடர்பாக 2 முறை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.சிறையில் இருந்து வெளியே வந்த அஜய்பிரசாத், குற்ற செயல்களில் ஈடுபடாமல் திருந்தி, கடந்த ஓராண்டாக வேலைக்கு சென்று வந்தது தெரிந்தது. ஏற்கனவே அஜய்பிரசாத்தால், பாதிக்கப்பட்டவர்கள் அவரை கொலை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து, கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். நேற்று அதிகாலையில் நடந்த கொலை சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : death ,Sriperumbudur , Sriperumbudur, Valipar, hacking murder, mystery mania
× RELATED 100 சதவீதம் வாக்களிப்போம் என தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் உறுதிமொழி ஏற்பு