ஊத்துக்கோட்டை:பெரியபாளையம் அருகே எல்லாபுரம் ஒன்றியம் பனப்பாக்கம் கிராமத்தில் கட்டி முடிக்கப்பட்டு 3 வருடங்களாகியும் அம்மா உடற்பயிற்சி கூடம் திறக்கப்படாமல் கிடக்கிறது. இதனால், பயிற்சி பொருட்கள் துருப்பிடித்து வீணாகி வருகின்றன. எல்லாபுரம் ஒன்றியம் பனப்பாக்கம் கிராமத்தில் சுமார் 4 ஆயிரத்திற்ககும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தை சுற்றியுள்ள இளைஞர்கள் பயன்பாட்டிற்காக, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சிதுறை சார்பில் கடந்த 2016-2017ம் ஆண்டு தாய் திட்டத்தின் கீழ் ரூ. 10 லட்சம் செலவில் அம்மா உடற்பயிற்சி கூடம் கட்டப்பட்டது.
இதில், கிராம புற பகுதிகளில் உள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆகியோர் உடற்பயிற்சி செய்ய இந்த உடற்பயிற்சி மையம் கட்டப்பட்டது. ஆனால், இந்த உடற்பயிற்சி மையம் கட்டப்பட்டு 3 வருடங்கள் ஆகியும் இதுவரை திறக்கப்படவில்லை. இதனால், உடற்பயிற்சிக்கு என தேவையான உபகரணங்களை வாங்கி வைத்துள்ளனர். அந்த பொருட்கள் தற்போது பயன்படாமல் துருப்பிடித்து வீணாகும் நிலையில் உள்ளது. எனவே, இளைஞர்களின் நலன் காக்க அமைக்கப்பட்ட உடற்பயிற்சி கூடத்தை திறக்க வேண்டும் என அப்பகுதி இளைஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.